மதுரை, ஏப். 1 - தமிழகத்தில் வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி, இடது ஜனநாயக அணியை உருவாக்கி மதவாத, கார்ப்பரேட் சக்திகளை முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் அழைப்பு விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட மாநிலச் செயலாளர், மாநில செயற்குழுவை அறிமுகம் செய்து வைத்து பிரகாஷ்காரத் வாழ்த்திப் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த மூன்று நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்று, அரசியல் அறிக்கையை முன்வைத்து விவாதிக்கப்பட்டு, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நம் நாட்டில் இந்துத்துவா - கார்ப்பரேட் சக்திகள் ஆட்சியில் இருந்து கொண்டு இந்திய குடியரசின் ஜனநாயக மதச்சார்பற்ற கட்டமைப்பை அழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.
ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கேரள மாநிலம் கண்ணூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பாஜக தலைமையிலான இந்துத்துவா கார்ப்பரேட் அரசை எப்படி வலுவாக தடுத்து நிறுத்துவது, அந்த சக்திகளை முறியடிக்க, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமையை எப்படிக் கட்டுவது, பாஜக அரசை வீழ்த்துவது என்பது குறித்து விவாதித்துத் தீர்மானிக்கப்படும். தற்போது நடந்து முடிந்துள்ள இம்மாநில மாநாட்டில் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டுவது, இடது ஜனநாயக அணியை விரிவாக ஏற்படுத்துவது பற்றியும், தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்த்து வீழ்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் சுதந்திரமாக, வீரியம் மிக்க முறையில் ஜனநாயகப் பூர்வமாக விவாதத்தில் பங்கேற்று, ஒன்றுபட்டு முடிவெடுத்த அனைவருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கிறேன். மாநாட்டில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநிலத் தலைமையின் கீழ் வலுவான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்கும் பணியையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.