tamilnadu

img

முதல்வருக்கு மாற்றுத் திறனாளிகள் நன்றி...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், “வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு தற்போது பெற்றுவரும் ஓய்வூதியம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1 ஆம் முதல் உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், செவ்வாயன்று (டிச.6) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி தலைமையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மாநிலச் செயலாளர் ஜீவா, பாரதிஅண்ணா ஆகியோர் உடனிருந்தனர். டிசம்பர்-3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டி.எம்.என். தீபக், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பி. சிம்மச்சந்திரன், தேசிய பார்வையற்றோர் இணையத்தின் திட்ட இயக்குநர் பி. மனோகரன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் நன்றி தெரிவித்தனர். சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் உடனிருந்தார்.