மனிதர்கள் 1953ஆம் ஆண்டு பூமியின் மிக உயரமான மலைச் சிகரமான ஜோமோலுங்மா சிகரத்தின் உச்சியை முதன்முறையாக அடைந்தனர். அதன்பிறகு, தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் இந்த மலைச் சிகரத்தின் உச்சியை அடைந்துள்ளனர். மேலும், ஆண்டுதோறும் சுமார் ஒரு இலட்சம் பயணிகள் ஜோமோலுங்மா பகுதிக்கு வருகை தருகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மலையேறுபவர்கள் மற்றும் பயணிகளின் வருகையால், ஜோமோலுங்மாவில் கடினமாக சுத்தம் செய்யக் கூடிய கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக, கடல் மட்டத்தில் இருந்து 6000 முதல் 7000 மீட்டர் உயரமான பகுதியில் வெப்பநிலை குறைவு, ஆக்ஸிஜன் செறிவு குறைவு உள்ளிட்ட கடும் அறைகூவல்களை எதிர்கொள்ளும் சூழலில், கழிவுப் பொருட்களை சுத்தம் செய்வது அபாயமான பணியாகும். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு, சீனாவில், 30 பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு, கழிவுப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டு வருகிறது. ஜோமோலுங்மாவின் தெற்குப் பக்கத்தில், நேபாள ராணுவம், 2019ஆம் ஆண்டு முதல் சுத்தம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அவ்வாண்டில் மட்டும் 10 டன் கழிவுப்பொருட்களை சேகரித்தது. 2020ஆம் ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. 2021ஆம் ஆண்டு 27.6 டன் கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. ஏப்ரல் 22ஆம் நாளான வெள்ளியன்று, உலக பூமி தினமாகும். அதனையொட்டி பூமி பாதுகாப்பில் இணைந்து செயல்பட்டு, தூய்மையான மற்றும் அழகான பூமிக்கு தங்கள் பங்களிப்பை ஆற்றினர்.