சென்னை, ஜூன் 27- சமூக நலத்துறை அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்று சத்துணவு ஊழியர்களின் 72 மணிநேர பட்டினிப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.2000 ஓய்வூதியத்தை உயர்த்தி 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 72 மணி நேர பட்டினிப் போராட்டம் சென்னை சேப்பாக்கம் வளாகத்தில் திங்களன்று (ஜூன் 26) துவங்கியது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) அரசுத் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொதுச்செயலாளர் அ.மலர்விழி, பொருளாளர் எம்.ஆர்.திலகவதி, துணைத் தலைவர்கள் பே.பேயத்தேவன், ஆ.பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி, மாநிலச் செயலாளர்கள் ஹேமலதா, வாசுகி ஆகியோரும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு ஆகியோரு டன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காலிப்பணியிடங்களை நிரப்பவும், வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்குவதாகவும், உதவியாளர்களை, சமையலர்களாக பதவி உயர்வு வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓய்வூதியம் குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்ப தாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். போராட்டம் நடைபெற்ற இடத்திற்கே வந்தும் அமைச்சர் இதை தெரிவித்தார். இதையடுத்து போராட்ட த்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.