tamilnadu

img

மணல் எடுப்பது குறித்து ஏராளமான வழக்குகள்.... சிபிஐ விசாரணைக்கு ஆட்சியர்கள் உட்பட நேரிடும்.... மதுரை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மதுரை:
மணல் எடுப்பது தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தும், தினமும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த நிலை தொடர்ந் தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மணலூரைச் சேர்ந்த பொற்கோ, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார்.அதில்,” மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் சிவகங்கை மாவட்டம் வைகை நதிக்கரைப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர், மற்றும்பாசியாபுரம். இந்தப் பகுதிகளில் தற்போது தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதியில் கீழடி உட்பட பல இடங்களில் சங்ககாலம் முதல், வைகை நதிக் கரையோரம் வாழ்ந்த மனிதர்கள் நாகரீகமாக வாழ்ந் ததற்கான பல ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

இங்கு கிடைத்துவரும் தமிழ் பிராமி எழுத்துகள், பண்டைய பொருட்கள் போன் றவை ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து வருகிறது.இந்தப் பகுதியில் உள்ள அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர், மணலூர் பகுதியில்,உள்ள விவசாயப் பகுதியில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி அரசின் அனுமதி பெறாமல் அரசுவிதிகளை மீறி விவசாய நிலங்களில் ஆழமாகதோண்டி அளவுக்கதிகமாக மணலை அள்ளி வருகிறார். இதனால் விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதுடன், தொல்லியல் ஆய்வுகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. எனவே இப்பகுதியில் மணல் அள்ளுவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, “கீழடி அகழாய்வின் தொடர்ச்சியாக மணலூர் அகழாய்வுப் பணிகள் நடக்கும் இடத்தில்இருந்து எவ்வளவு தொலைவில் மணல் எடுக்கப்படுகிறது? மேலும் சவுடு மண் எடுப்பதற்கு பெறும் அனுமதி முறையாக பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்யப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர்.தொடர்ந்து, தினமும் பத்துக்கும் மேற்பட்டமணல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வருகிறது. மணல் வழக்குகள் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்என தெரிவித்தனர்.தொடர்ந்து, வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கைதாக்கல் செய்ய உத்தவிட்டு வழக்கை செப்டம்பர் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

கண்டுகொள்ளாத ஆட்சியர் ஜெயகாந்தன்
குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. இதைத் தடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கே.வீரபாண்டி,தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும்பல்வேறு கிராம ஊராட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மணல் கொள்ளையில் ஆளுங்கட்சியினரை ஆட்சியர் ஜெயகாந்தன் அனுசரித்துப் போவதாகவும், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்யவேண்டுமென வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத் தின. தொடர்ந்து போராடியும் வருகிறது. இந்த நிலையில் மணல் எடுப்பது குறித்து நீதிமன்றம் ஆட்சியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் நடைபெறும் மணல் கொள்ளை விவகாரத்தில் ஆட்சியரை மாற்றிவிட்டு மற்றொருவரை நியமித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

;