tamilnadu

img

அதிசய அயா


சிரியாவின்
அதிகாலை
சீராய்
விடியவில்லை!
நிலம் அதிர்ந்தது!
பூமி பிளந்தது!
கட்டிடங்கள்
சரிந்தன!
கதறியபடி
சனமெல்லாம்
கண்ணிமைக்கும்
நேரத்தில்...
பூமியின்
ஆழத்தில்
புதையுண்டே
போயினர்!
இடிபாடுகளுக்கு
இடையில்...
மரண ஓலமிட்ட
மக்களுக்கிடையே...
நான் மட்டும்
பாதுகாப்பாய்
என் தாயின்
கருவறையில்!
என் அம்மா...
என்ன நினைத்தாளோ
ஏது நினைத்தாளோ...
பிரசவ வலி
கண்டவுடன்...
தன்னுயிரை
கையில் 
பிடித்து....
என்னை 
பிரசவிக்க
இம்மியளவே
நம்பிக்கையோடு
எல்லா ப்ரயத்தனமும்
 தாயவள்
கைக் கொள்ள...
மீட்புக் குழுவினர்
அவளை
மீட்டெடுத்த
நாழிகையில்...
என்னைப் பிரசவித்தாள்!
அவளோ மரணித்தாள்!
என்னைத் தான்
பார்த்தாளோ?
நிம்மதியாய்
போனாளோ?
எதுவும் நானறியேன்!
மறுநொடியே...
மனிதம் நிறைந்த
கையிரண்டு 
என்னை
மார்போடு அணைத்து
ஓடி...உயிர் காத்தது!
பூகம்ப அதிர்விலும்
புது உயிராய்
பிறந்த நான்
 “அயா” என
அங்கிருந்தோரால்
பெயரிடப்பட்டேன்!
“அயா “ என்றால்
அரபி மொழியில்
அதிசயம் 
எனப் பொருளாம்!
ஆயிரம் பேர்
என்னை 
தத்தெடுத்து வளர்க்க
தயாராய்
உள்ளனராம்!
அம்மா...
நீ அமைதி கொள்!
இம் மண்ணுலகில்
மனிதம் உள்ளவரை
“அயா” க்கள்
கைவிடப்படமாட்டார்கள்!
வத்சலா ரமணி