tamilnadu

img

மே 12 வேலை நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

தொழிற்சங்கங்களுடன் அரசு இன்று பேச்சு 

புதிய மசோதா குறித்து முக்கிய தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு இன்று (ஏப்.24) பேச்சு நடத்தவுள்ளது. இன்று  மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரும், தலைமைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோரும் கலந்து கொள்வர் என்று அரசு தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப். 23- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டுள்ள தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிற் சங்கங்கள் மே 12 அன்று தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளன. தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து கூடுதலாக உயர்த்த  வகை செய்யும் சட்டத்திருத்த  மசோதா, சட்டப்பேரவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. தனியார் நிறு வனங்களில் வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் ஒன்றிய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி,  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த சட்டத்திருத்த  மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல்  செய்தார். அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம்

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 8 மணி நேர வேலை நேரத்தை அதிகரித்து,  தொழிற்சாலை சட்டத் திருத்தம் செய்திருப்பது குறித்து விவாதிப்பதற்கான அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டம் ஏப்ரல் 23 சென்னையில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் டி.எம்.மூர்த்தி, எஸ்.காசி விஸ்வ நாதன், ம.ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), ஜி.சுகு மாறன், க.திருச்செல்வன் (சிஐடியு), மு.சுப்பிர மணியன் (எச்எம்எஸ்), டி.வி.சேவியர், டி.வி.பாண்டியராஜ் (ஐஎன்டியுசி) வி. சிவகுமார், இ.சடை யாண்டி (ஏஐயூடியூசி), சொ.இரணியப்பன், உ.அதியமான், எம்.திருநாவுக்கரசு (ஏஐசிசிடியு) இரா.சம்பத் (உழைக்கும் மக்கள் மாமன்றம்), இரா.  அந்தரிதாஸ், க.ஆறுமுகம் (எம்எல்எப்), க.பேரறி வாளன் (எல்எல்எஃப்) ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர்  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 21.04.2023 அன்று தொழிற்சாலை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், 2020 ஆம் ஆண்டு தொழிலகப் பாதுகாப்பு. சுகாதாரம்  மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் (மையச்  சட்டம் 37/2020) சட்டமானது 2020 ஆம் ஆண்டு  செப்டம்பர் திங்களில் இந்திய அரசால் இயற்றப் பட்டது என்றும் அதை செயல்படுத்த தாமதமாவ தால் இந்தச் சட்ட திருத்தத்தை கொண்டு வருவ தாகவும் கூறப்பட்டுள்ளது. 

முதலாளிகள் சங்கங்கள் 

வேலை நேரத்தை நீட்டிப்பதன் காரணமாக தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண் தொழி லாளர்களுக்கு நன்மை ஏற்படும் என்று முதலாளி களும் முதலாளிகளின் சங்கங்களும் விண்ணப்பங் கள் தந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.   ஆனால் இதுபற்றி  தொழிற்சங்கங்களிடம் தமிழ்நாடு அரசு கலந்தாலோசிக்கவில்லை. மேலும்  இதேபோன்ற கோரிக்கை, உயர்மட்ட முத்தரப்புக் குழுவான தமிழ்நாடு மாநில தொழிலாளர் ஆலோ சனை வாரியக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு தொழிலாளர் அமைச்சர் முன்னிலையில் அதை பரிசீலிக்க இயலாது என நிராகரிக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளவில்லை.

 போராடிப் பெற்ற உரிமை 

வேலை நேரக் குறைப்பிற்காக தொழி லாளர்கள் தொடர்ந்து 150 ஆண்டுகளாக போராடி  வந்திருக்கிறார்கள். 1880க்கு முன்பு 18 மணி நேரம் என்று இருந்த வேலைநேரம், படிப்படியாக 16. 14. 12, 10 எனக் குறைக்கப்பட்டு. 1936ல் புதுச்சேரி யிலும், 1947 முதல் இந்தியா முழுமையும் எட்டு மணி வேலை நேரம் அமலுக்கு வந்தது, உலகின் பல நாடுகளில் ஐந்து நாள் வேலை, ஒரு நாளைக்கு 7 மணி நேரம் என வாரத்துக்கு 35  மணி வேலை நேரம் என மேலும் குறைக்கப் பட்டுள்ளது. முதன்முறையாக மீண்டும் வேலை நேரத்தை உயர்த்துகிற முயற்சியை தமிழ்நாடு அரசு மேற் கொள்வது வரலாற்றை பின்னோக்கித் தள்ளுவ தாகும்.

பிஎம்எஸ் கூட எதிர்க்கிறது

8 மணி வேலை நேரத்தை உயர்த்துவது குறித்த ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் தொகுப்பை பிஎம்எஸ் உள்ளிட்ட எல்லா தொழிற் சங்கங்களும் எதிர்க்கின்றன. இந்தச் சட்டங் களுக்கு எதிரான போராட்டத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையும் முன்னணியில் நின்று  பங்கேற்று வருகிறது. ஒன்றிய அரசால் இது வரை செயல்படுத்த முடியாத சட்டத்தை, தமிழ்நாடு அரசு முன்னதாகவே செயல்படுத்துவதற்கு சட்டத் திருத்தம் செய்வது கண்டனத்திற்குரியதாகும். இந்த சட்டத்திருத்தத்தின் மீது விளக்கங்கள் பெறுவதோ அல்லது பேரம் பேசி உடன்பாட்டுக்கு வருவதோ எந்த வகையிலும் சாத்தியமானதல்ல. எனவே இந்த சட்டத் திருத்தத்தை கைவிட்டு, உடனடியாக திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு அரசை அனைத்து தொழிற்சங்க கூட்டம் வலி யுறுத்தி கேட்டுக்கொள்கிறது.  ஆறு தலைமுறைகளாக நமது முன்னோர்கள் உயிர்ப் பலிகள் தந்து, ரத்தம் சிந்திப் போராடி பெற்றுத் தந்த 8 மணி நேர வேலை உரிமையை, விட்டுக் கொடுக்காமல் போராடி நிலை நிறுத்து வது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வர்க்கக் கடமை யாகும். இதற்காக பின்வரும் போராட்டங்களை நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்டம் முடிவு செய்கிறது.

தொடர் போராட்டம் 

  1.     26.4.2023ஆலை வாயில் கூட்டம் ஆர்ப்பாட்டம் 
  2.  27.4.2023 வேலைநிறுத்த முன்னறிவிப்பு வழங்குதல்
  3.  28.4.2023 கருப்பு பட்டை அணிதல் மற்றும்  ஆலைகளில் மதிய உணவு புறக்கணிப்பு
  4.  4 & 5.5.2023 இருசக்கர வாகனப் பிரச்சாரம்
  5.  9.5.2023 மாவட்ட தலைநகரங்கள், தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம்

l 12.5.2023 வேலை நிறுத்தம், மறியல்.

சட்டத் திருத்தத்தை கைவிடச்செய்ய மேற் சொன்ன போராட்டங்களில் பெரும் திரளாக பங்கேற்குமாறு தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு  அனைத்து சங்க கூட்டம் அறைகூவல் விடுக்கிறது. இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.