திருக்கண்ணன் விதை நெல்லோடு வயலுக்கு வந்தான். நார் பெட்டியில் விதை நெல்லை நிரப்பினான். வயலுக்குள் இறங்கினான். பொன்னி நெல் விதைகளைத் தூவ ஆரம்பித்தான். சர்ர்ர்ர்.... சர்ர்ர்ர்’...ன்னு விதைகள் பறந்து வயலில் சிதறியது. அடடா.... தூவிய வேகத்தில் ஒரு நெல் மட்டும் வரப்பில் விழுந்துவிட்டது. வரப்பில் விழுந்த நெல் “ஐய்யோ.... ஐய்யோ”...என்று கத்தியது. மனுசன் கத்தினாவே இந்த காலத்தில் யார் காதிலும் விழாது. பாவம் நெல். அதுவும் இத்துணூண்டு நெல்லின் சத்தம் யாருக்குக் கேட்கப் போகுது? பக்கத்து மூட்டையில் இருந்த மணிச்சம்பா குதித்தது. அடியேய்.... பொன்னி, விழ வேண்டிய இடத்தில் விழாமல் எங்கு விழுந்து கிடக்க?” என்றாள் மணிச்சம்பா. “ஏய்... குந்தானி”.....என்றாள் வரப்பில் விழுந்த பொன்னி. “என்னடி சொன்ன?”..... என்றாள் மணிச்சம்பா. “சம்பாக்கான்னு சொன்னேன்” என்று சமாளித்தாள். “உனக்கு நேரங்கெட்ட நேரத்தில் தான் கோவம் வரும்.” நான் என்ன செய்வேன் ஏது செய்வேன்!” அங்கேயும் இங்கேயும் குதித்தது பொன்னி நெல். “அடியேய்.....ரொம்ப குதிக்காதடி.... வாய்க்காலில் விழுந்துடப் போற..!” பதறியது மணிச்சம்பா நெல். “எப்போய்.... கஞ்சி கொண்டு வந்திருக்கேன்.” இப்படியும் அப்படியும் தடுமாறி வரப்பில் ஓடிவந்தான் திருக்கண்ணனின் மகன். “அடியேய்....பொன்னி ஓரமா ஒதுங்கு. முதலாளி மகன் வாறான்.” “காலில் மிதிபட்டுடாத...” என்று மணிச்சம்பா நெல் கவனப்படுத்தியது.
மெல்ல...மெல்ல...’ தாவி ஒதுங்கியது பொன்னி நெல். வரப்பில் களிமண் கிடந்தது. அது தெரியாமல் குதித்து குதித்து வந்த முதலாளி மகன் ‘பொத்துன்னு’ வரப்பில் வழுக்கி விழுந்துட்டான். “அய்யோ...” விழுந்த வேகத்தில் கஞ்சி சட்டி பறந்து வாய்க்காலில் விழுந்துவிட்டது. தட்டுத் தடுமாறி எழுந்து, சேறும் சகதியுமாய் நின்றான். பார்க்க சோளக்காட்டு பொம்மையாட்டம் இருந்தான். மணிச் சம்பா நெல்லுக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. ‘ஹா......ஹா’...ன்னு விழுந்து விழுந்து சிரித்தாள். அய்யோ பாவம்! பொன்னி நெல் களிமண்ணில் அமுங்கிக் கிடந்தாள். எவ்வளவு முக்கியும் முனங்கியும் பொன்னி நெல்லால நகரக் கூட யவில்லை. அழகான அண்டங்காக்கா ஒன்று வந்தது. வரப்பில் உட்கார்ந்தது. களிமண்ணில் ஒட்டியிருந்த நெல்லைப் பார்த்துவிட்டது. ஒரே கொத்தாகக் கொத்தியது. ‘சல்ல்ல்லென்று’ பறந்துவிட்டது. நாள்கள் ஓடின. விதைத்த நெல்மணிகள் முளைத்தன. அறுவடைக்குத் தயாரானது. நல்ல விளைச்சல். மணிச்சம்பா முளைச்சு நெற்கதிரானது. கதிரெல்லாம் கொத்துக் கொத்தாய் விளைந்து நின்றன. மணிச்சம்பா நெல் குடும்பமும் குட்டியுமாய் சாக்கில் நிரம்பியது. ஒரே குதூகலம். “டவுனுக்குப் போறோமே.... டவுனுக்குப் போறோமே.....” என்று குதியாட்டம் போட்டது மணிச்சம்பா நெல். ஒதுங்கி நின்ற சோவி நெல்மணியான பதரு குமுறிக் கொண்டே சொன்னாள்,
“போங்கடி.... போங்க....” ஒருநாள் எவனாவது உங்கள பொங்கித் திங்கப் போறான். இதில என்னாங்கடி குதியாட்டம்.” டவுனில் இருக்கும் சந்தைக்கு வந்து இறங்கின நெல்லு மூட்டைகள். ஒரு மூட்டையில் இருந்து முண்டியடித்து எட்டிப்பார்த்தது நெல் ஒன்று. “ஏ....யக்கா... மணிச்சம்பா” .....சத்தமாய் கத்தியது. பக்கத்தில் கிடந்த மூட்டைக்குள் இருந்து எட்டிப் பார்த்தாள் மணிச்சம்பா. “ஏ...... ஆத்தா.... என் தங்கச்சி பொன்னி” என்று தாவிக்குதித்து எட்டிப்பார்த்தது மணிச்சம்பா நெல். எப்படியோ ஓட்டை வழியாக நுழைந்து வெளியே குதித்தது. பொன்னி நெல்லும் கஷ்டப்பட்டு முண்டியடித்துக் கொண்டு வெளியே வந்தது. இரண்டு பேரும் ‘குடு’...’குடு’....வென்று ஓடி வந்தன. ‘தஸ்.... புஸ்’...என்று மூச்சு வாங்கின. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துச் சிரித்தன. மூன்று மாதப் பிரிவை நினைத்து அழுதன. காக்காவிடமிருந்து தப்பித்த கதையை... சுருக்கமாக சொன்னது பொன்னி. “என்னை கொத்திக் கொண்டு போன காக்கா ஒரு மரத்துல பொன்னி உட்கார்ந்தது. கழுத்தைச் சொரிந்து கொள்வதற்காக என்னை மரத்தின்மீது வைத்தது. மரத்திலிருந்த நான் வழுக்கி கீழே விழுந்துட்டேன். விழுந்த இடம் ஒரு விவசாயினுடைய விதை நெல் கூடை. அப்பதான் எனக்கு உசுரே வந்தது. பிறந்த இடம் வேற.... வந்த இடம் வேற..... எப்படி பொழப்பு ஓடுமோ என்று கவலையாக இருந்தது. ஆனா! எங்க முதலாளி தங்கமான மனுஷன். இப்போ குடும்பம் குட்டின்னு செழிப்பா இருக்கேன்க்கா” என்றாள் பொன்னி நெல். அந்த நேரம் பார்த்து அண்டங்காக்கா வந்தது. பொன்னியை ஒரே கொத்தாகக் கொத்திக்கொண்டு பறந்தது. பாவம் பொன்னி நெல். அழகான எங்க போவாளோ? என்ன ஆவாளோ?