மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று நடைபெற்றது. இதற்காக அழகர்கோவில் சாலையில் உரிய அனுமதி இல்லாமல் பாஜக கட்சியின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி கொண்டிருந்தனர். அப்போது பாஜகவினர் மாநகராட்சி ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் உரிய அனுமதியின்றி போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைத்ததாக பாஜக மதுரை மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்ட 25 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.