tamilnadu

img

தினமலருக்கு மறுப்பு - தமிழ்நாட்டின் உரிமைக்காக சமரசமின்றி போராடுகிறோம் - சு. வெங்கடேசன் எம்.பி

மதுரை இரயில்வே கோட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் உத்தரவு தொடர்பாக தினமலர் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக்கு மறுப்பு தெரிவித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாட்டின் உரிமைக்காக சமரசமின்றி போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:
"இன்றைய தினமலர் நாளிதழில் “மதுரை இரயில்வே கோட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப சென்னை தேர்வு வாரியத்தின் மூலம் ஆட்களை தேர்வு செய்யாமல் முதன் முறையாக திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் ஆட்களை தேர்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உரிமை பாதிக்கப்படும் இந்த செயல் குறித்து மதுரை எம்.பி இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்று எழுதியுள்ளனர். 
“சென்னையில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில் ஒரு மணி நேரம் பிளாட்பாரம் மாற்றப்பட்டதற்கு பொங்கி எழுந்த சு.வெங்கடேசன் மதுரைக் கோட்ட உரிமை பாதிக்கப்பட்டதற்கு எதிராக எதுவும் செய்யாமல் இருக்கிறார்” என்று விரிவாக எழுதியுள்ளனர். 
மதுரைக் கோட்டம் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்திற்கு முதன் முறையாக மாற்றப்பட்டுள்ளது என்று தினமலர் எழுதியுள்ளது. இது தவறு. மாற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த 18 ஆண்டுகளும் திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தின் மூலம் தான் மதுரைக் கோட்டப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதிலிருந்து இதற்கு எதிராக தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருகிறேன். இரயில்வே ஆலோசனைக்குழு கூட்டத்தில் இந்த பிரச்சனையை எழுப்பியுள்ளேன். இரயில்வே அமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சனையை கொண்டு சென்றுள்ளேன். தென்னக இரயில்வே பொதுமேலாளர் நடத்தும் ஆலோசனை கூட்டத்திலும் தொடர்ந்து இந்த பிரச்சனையை எழுப்பி உள்ளோம். இவைகள் குறித்து தொடர்ந்து ஊடக செய்தி குறிப்பும் வெளியிட்டுள்ளோம். 
மொழிவழி மாநிலங்களின் அடிப்படையிலேயே வேலைவாய்ப்புக்கான வாரிய எல்லைகள் அமைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். மதுரைக் கோட்டம் சென்னை தேர்வு வாரியத்தோடு தான் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 
கடந்த வாரம் (14-2-24) எமது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்தப் பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும், மதுரைக் கோட்டம் சென்னைத் தேர்வு வாரியத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன் காணொலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
2006 ஆம் ஆண்டு முதல் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனையை இன்று வந்துள்ள புதிய பிரச்சனையைப் போல எழுதுவதும், அதற்கு நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுவதும் உள்நோக்கம் கொண்டதாகும்.
அதுமட்டுமல்ல, “ சென்னை ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் பிளாட்பாரம் மாற்றி போட்டதற்காக பொங்கி எழுந்தவர்” என்று இகழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளது தினமலர். அது பாண்டியன் விரைவு ரயிலை நடைமேடை மாற்றிப்போட்ட பிரச்சனை மட்டுமல்ல, ஒரு தனி நபருக்காக தனி ரயிலை இயக்கும் காலனி ஆட்சிகால நடைமுறை இன்னும் தொடர்வதற்கு எதிரான நடவடிக்கையாகும். அந்த தனி நபரின் வசதிக்காக சுமார் 1000 பேர் பயணிக்கும் பாண்டியன் ரயிலை வேறு நடைமேடைக்கு மாற்றியதற்கு எதிரான போராட்டமாகும். இப்பிரச்சனைக் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இரயில்வே துறை. அதிகாரவர்க்கத்தின் ஆடம்பரத்திற்கு மக்களின் நலனை இரையாக்க முடியாது. 
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த வாரம் 5 ஆண்டுகளில் நாங்கள் பெற்ற 150 வெற்றிகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். தினமலர் அந்த நூலை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். அதில் ரயில்வே துறை சார்ந்து 23 வெற்றிகள் உள்ளன. அதில் மிக முக்கிய வெற்றிகளில் ஒன்று கோரக்பூர் ரயில்வே காத்திருப்பு பட்டியலில் இருந்தவர்களை சென்னை RRB ல் பணியமர்த்திய நடவடிக்கையை முறியடித்து தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை உரிமையை உரிமையைப் பாதுகாத்ததாகும். பணியிட உத்தரவு வழங்கப்பட்ட பின் அதனை திரும்பப் பெற வைத்தது இரயில்வே வரலாற்றில் பெரும் சாதனையாகும். இந்த நூல் தொகுக்கப்பட்ட பின் பெற்ற முத்தாய்ப்பான வெற்றியை இங்கே பதிவிடுகிறேன்.
வந்தே பாரத் ரயில்களுக்கான ரயில் பெட்டி தயார் செய்யும் ஒப்பந்தத்தை தனியாருக்கு விடுவதை கைவிட வலியுறுத்தி பொதுத்துறையான ஐ சி எஃப் க்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அந்த கோரிக்கை இப்பொழுது வெற்றி பெற்றுள்ளது. இரயில்வே துறையை பாதுகாப்போம். இரயில்வே பணியிடங்களில் மாநில உரிமைகளைப் பாதுகாப்போம் என்கிற கொள்கை வழியில் நின்று செயல்படுகிறவர்கள் நாங்கள். மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சியை எதிர்த்தும், மதுரை கோட்டத்தை சென்னை தேர்வாணையத்தோடு இணைக்கவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.