tamilnadu

img

சிறப்பாய் வாழ்வாய் - முனைவர் இரா.செந்தில்குமார்

ஒற்றுமை நமக்குப் பலமாகும்
 உயர்வுக்கு அதுவே வழியாகும்
வேற்றுமை நமக்குப் பிரிவாகும்
 வேண்டா தொல்லை தரலாகும்.

கூடியே வாழ்வது மகிழ்வாகும்
 கோடி நன்மை பெறலாகும்
தேடி உறவுகள் வந்திடலாம்
 திகட்டா வாழ்வைத் தந்திடலாம்.

சொந்தம் இருந்தால் சுகமாகும்
 சுற்றம் சேரின் இனிதாகும்
பந்தம் செழிக்கத் துணையாகும்
 பாராது போனால் துயராகும்.

சுற்றம் நட்புடன் சேர்ந்திடு
 சுவைக்கும் வாழ்வில் மகிழ்ந்திடு
குற்றம் நீக்கித் தேர்ந்தெடு
 குவலயம் போற்ற வாழ்ந்திடு.

விட்டுக் கொடுப்பதைச் செய்திடு
 வீழாது இருப்பாய்த் தெரிந்திடு‌.
கெட்ட செயல்களை நீக்கிடு 
 கேடுகள் எதையும் போக்கிடு.

பெரியோர் சொல்லைக் கேட்டிடு
 பேரன்பை அவரிடம் செலுத்திடு
சிறியோர் தொடர்பைக் கைவிடு
 சிறப்பாய் வாழ நினைத்திடு!