விருதுநகர், ஜன.6- தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான நிலையில், மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அகற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய நிலையில் அதே இடத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக வாக்காளர் பட்டியல் புதனன்று வெளியிடப் பட்டுள்ளது. இதனால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கடந்த 1989ஆம் ஆண்டு கட்டப்பட்டன. இதில் ‘ஏ’ முதல் ‘இ’ பிளாக் வரை அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன. அதில் பெரும்பாலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தி னர் வாடகைக்கு வசித்து வந்தனர். அவர்களில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் அப்போது வாக்குகள் இருந்தன. இந்நிலையில், தொடர்ந்து குடியிருப்புகளை மராமத்து செய்ய நிதி ஒதுக்காத காரணத்தால் கடந்த 1994ஆம் ஆண்டு காலகட்டத்தில் சுவர்கள் பெயர்ந்து விழுந்தன.
இதையடுத்து, அங்கு குடியிருப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மேலும், சில வீடுகள் திடீரென உடைந்து விழுந்ததில் சிலர் காயமடைந்தனர். இதனால், அங்கு குடியிருந்தவர்கள் அனை வரும் நாளடைவில் காலி செய்து வேறு பகுதிக்கு குடியேறிச் சென்றனர். இந்தநிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி கட்ட அப்போதைய தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை அகற்றி விட்டு அங்கு, அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டிட முடிவு செய்யப்பட்டது. பின்பு, அங்கிருந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் ‘ஏ’ முதல் ‘இ’ பிளாக் வரை உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளும் இடித்து அகற்றப்பட்டன. தற்போது, அரசு மருத்துவக் கல்லூரியும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறும் நிலையில் உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ‘ஏ’ முதல் ‘இ’ பிளாக் வரை 200க்கும் மேற்பட்ட வாக்காளர் உள்ள தாக புதனன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்கா ளர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த 2021 நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகம் எண் 197 ல் ஆண் வாக்காளர் கள் 354, பெண் வாக்காளர்கள் 368 என மொத்தம் 722 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் வரிசை எண் 1 முதல் 273 வரை உள்ள வாக்காளர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ‘ஏ’ முதல் ‘இ’ வரை உள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு குடியிருந்த பலர் விருதுநகர் நகர் பகுதியிலும், வேறு பகுதியிலும் குடியேறி பல ஆண்டுகள் ஆகி விட்டன. அதில் பலர், தங் களது வாழ்விடங்களில் உள்ள வாக்காளர் பட்டிய லில் பெயரை சேர்த்து புதிய வாக்காளர் அடை யாள அட்டையையும் பெற்று விட்டனர்.
இதனால், பாகம் எண் 197 ல் உள்ள 1 முதல் 273 வரை யுள்ள வரிசை எண்களில் உள்ள வாக்குகள் பல இரு இடங்களில் இருக்க வாய்ப்புள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, ஆட்சியர் அலு வலக வளாகத்தில் இருந்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தற்போது வரை 273 வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள் ளனர். மேலும், குடியிருப்புகளே இல்லாத நிலை யில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வாக்காளர்கள் இருப்பதாக அரசின் முக்கிய ஆவணமான வாக்காளர் பட்டியலே கூறுவது எப்படி? எனக் கேள்வி எழுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அனுப்பியுள்ளார். இதில், விருதுநகர் சட்டமன்ற தொகுதி, பாகம் எண் 197 இல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளதாகவும் அதில் 200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அங்கு குடியிருப்பு கள் இல்லை. எனவே, இரட்டை வாக்காளர்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, அதை ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.