(கோவி.பால.முருகு)
கற்றிட நூல்களைத் தேர்ந்தெடு
கசடற அவற்றைக் கற்றிடு!
கற்றதை வாழ்வில் கடைபிடி
காணும் நன்மை பலபடி!
எண்ணும் எழுத்தும் கண்ணாம்
ஏற்காதார் முகத்தது புண்ணாம்!
மண்ணில் கற்றோர் கூடுவார்
மனமிக பிரிவால் வாடுவார்!
செல்வர்முன் வறியராய்க் கற்க!
சேர்ந்திடும் அறிவு நிற்க!
செல்லிடம் சொந்தமாம் கற்றோர்க்கு
சாகும்வரை கல்லாதது எதற்கு?
ஒருமுறை கற்றால் தொடரும்
ஓங்கிட இன்பம் படரும்
பொருளும் பொன்னும் துணையிலை
போற்றும் கல்விக்கு இணையிலை!
கல்வியைக் கண்ணெனக் கண்டு
கல்லா தவரைத் தூண்டு
கல்வியில் சிறக்கா நாடு
காட்சியில் இருண்ட வீடு!