ஜனவரி 17 ஒரு எழுத்தாளராக அதுவும் கார்ல் சாக னைப்போல அறிவியல் எழுத்தாளராக இருக்க விரும்பிய யாராலும் பாராட்டப்படாத குழந்தை ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட நாள். எதிர் காலத்தில் மிகச் சிறந்த இயற்பியல் விஞ்ஞானியாக ஒளி வீச வேண்டிய ரோகித் வெமுலா சமூக ஆதிக்க வாதிகளின் தொடர் கொடூரத்தால் உயிரை மாய்த்து நிழல்க ளிலிருந்து நட்சத்திரங்களை நோக்கிப் பயணப்பட்ட நாள். கழிவிரக்கம் கொள்ள வேண்டிய நாள் அல்ல, சமூக அமைப்பின் மீதான கோபத்தை கூர்மைப்படுத்த வேண்டிய நாள். பிறப்பால் தீண்டத்தகாதவர்களாய் அடக்கப்பட்ட வர்கள் எந்த வகையிலும் மனுதர்ம நீதியிலிருந்து மீறல் கொண்டு எழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாகச் செயல்படும் ஒடுக்குமுறையாளர்களின் நடவடிக்கைகளை கவலையோடும் உறுதியோடும் பார்க்க வேண்டிய நாள்.
பசுவைப் பாதுகாப்பதற்காக நாடு முழுவதும் கட்டி உருவாக்கப்பட்டு அதை பேணிப் பாதுகாக்கப்படும் படை யைப் போல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு அனைவருக்கும் தொண்டூ ழியம் புரியும் நிராயுதபாணிகளான தலித் மக்களைப் பாது காக்கும் வர்க்க ரீதியிலான மக்கள் அமைப்புகள் ஏராளமாக உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வுகள், சென்னை தொழில் நுட்பக் கழகப் போராட்டங்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. பட்டப் பகலில் பலர் முன்னிலையில் குஜராத் மாநிலம் உனாவில் அரை நிர்வாணமாக்கப்பட்டு தலித் மக்களை அடித்து நொறுக்கியதும், ஹரியானாவில் தூக்கில் தொங்க விடப்படுவதும் நடந்து கொண்டுதானிருக்கின்றது. தனி நப ராக இருந்தாலும் தமிழகத்தில் தர்மபுரி இளவரசனையும், நாமக்கல் கோகுல்ராஜையும், உடுமலை சங்கரையும் விட்டு வைக்க தயாரில்லை சாதியம். அடிமைச் சமூகத்தில் உருவாகிய சாதியம், நிலவு டமைச் சமூகத்தில் மேலும் கெட்டிப்பட்டு இறுகிப் போன நிலையில் நிலப்பிரபுத்துவம் முற்றாக உடைபடாவிட்டாலும் முதலாளித்துவம் வளரும் காலத்தில் சாதியம் உடை யும், மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியச் சமூகத்தின் மேல் கட்டுமானம் ஆகிய சாதியம் மேலும் மேலும் எல்லாத் தளங்களிலும் மிக நுட்பமாக வலுப்படு வதை மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது.
நாட்டில் ஒடுக்கப்பட்ட தலித்துகள், பழங்குடிகள் பாது காப்பிற்காக உருவாக்கப்பட்ட வன்கொடுமை தடைச் சட்டங்கள், அவ்வப்போது நீதி மன்றங்களால் வழங்கப் படும் தீர்ப்புகள் ஆகியவற்றால் மிகக் குறைந்த சதவீதத்திலான மக்களே பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டின் கிராமங்களில் நிலவுடமை சாதி ஆதிக்க சக்திகளின் அரசதிகாரமும் மேலாண்மையும் தலித்துகளை இன்னும் சேரியை விட்டு விடுவிக்க விரும்ப வில்லை. அதன் வேலியைப் பலமாக்குவதில் மூர்க்கத்தன மாகவே இருக்கிறது. கிராமப் புறங்களில் வேலையின்றி புலம் பெயர்ந்து நகர்ப்புறங்களில் வாழும் தலித்துகளும் புதிய வடிவங்களைச் சந்தித்தே வாழ்கின்றனர். அவ்வ ளவே நாட்டில் முதலாளித்துவம் சாதிகளில் உருவாக்கி வரும் புதிய உழைப்பாளி வர்க்கமும் கூட இந்த உணர்வுக ளில் சாதியம் என்ற அடிப்படையில் அடக்கு முறையாளர்க ளுடன் கைகோர்த்து நிற்பதே யதார்த்தமாக உள்ளது. கல்வி, வேலை வாய்ப்புகளில் தலித்களுக்கு அளித்த இட ஒதுக்கீடுகள் தற்போதைய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் தீவிர தனியார்மயக் கொள்கை நடைமுறைகளால் கானல் நீராய் மறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் மக்கள் தொகையால் இருபது சதவீத மக்களாய் வாழும் ஒடுக்கப்பட்ட இம்மக்களின் மிக மிகக் குறைந்த பகுதியினரே பொரு ளாதார பாதுகாப்புக்கு மட்டும் உட்படுத்தப்பட்டி ருக்கிறார்கள். சமூக அங்கீகாரத்தில் அப்போதும் இப்போ தும் கடைக்கோடியிலே உழல்கிறார்கள்.
2002 குஜராத் கலவரத்தின் போது உயர்மட்ட காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய ராஜன் பிரியதர்சி, ஓய்வு பெற்ற பின் கிராமத்திற்கு திரும்பிய போது தேகாம் தாலுகாவில் உள்ள கடக்கரா என்னும் தன் சொந்தகிராமத்தில் தீண்டத் தகாதவராகவே கருதப் பட்டார். இப்போது இவர் தலித்துகள் வாழும் பகுதியில் தான் வசிக்க முடிகிறது. இது தான் மோடியின் ஒளிரும் இந்தியா. தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் நாடு முழுவதும் உருவாகி வருகின்றன. புதிய நம்பிக்கை ஒளிக்கீற்று கிடைக்கிறது. இன்று நாட்டு நலனில், ஒற்றுமையில் வேறுபாடற்ற சமூக அமைப்பை உருவாக்குவதில் சாதியில் மேலோ ரென்றும் கீழோரென்றும் காலங் காலமாக தொடரும் படி நிலை சாதியத்தை உடைத்தெறிவதில் நம்பிக்கைக்கு உரிய வர்கள் இந்த நாட்டின் இளைஞர்களும் மாணவர்களுமே. நம்பற்குரியர், இவ்வீரர்கள்.. தங்கள் நல்லுயிர் ஈந்தும் புதிய உலகைப் படைப்பார்கள்… என்ற உறுதியோடு ரோகித் வெமுலாவின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.