tamilnadu

img

ஆளட்டும் செந்நிறமே!

ஏழையின் கண்கள் குளமாக - அங்கே 
    நீந்தி களித்திடும் ஆதிக்கமே 
கோழையின் நிழலோ கனலாக - மண்ணில்
    கோபுரம் வீழ்ந்திடும் சமமாக 

வேர்வை நதிகள் வளங்கொடுக்கும் - மண்ணில் 
    விதியினை வீழ்த்தியே நலங்கெடுக்கும்
தீர்வை உணர்ந்திடும் ஓரணியாய் - மண்ணில் 
    தீங்கெல்லாம் முறித்திடும் பேரணியே 

சீறிடும் செந்நிறம் பாய்ந்தொளிர - நன்றாய்ச் 
    சிந்தை எழுந்தே ஆய்ந்தொளிரும் 
மீறிடும் பழமை மாய்ந்திடவே - ஆங்கே 
    மீண்டும் புதுமை ஆய்ந்தெழுமே 

போரில் தோழமை முழங்கிடுமே - தீமை 
    புரியும் குறுமனம் கலங்கிடுமே
பாரில் உரிமை தொடுக்கட்டுமே - எங்கும் 
    பாதகச் செயலை முடிக்கட்டுமே 

வஞ்சம் வீழ்ந்திடும் நாளிதுவே - இனி
    வாழ்வினில் நிமிர்ந்திடும் சூளுரையே 
நெஞ்சில் கொள்கைப் போர்முகமே - இனி
    நேர்வது திறனெழும் பார்முகமே! 
கவிஞர் தமிழ்தாசன் 
உசிலம்பட்டி