ஏழையின் கண்கள் குளமாக - அங்கே
நீந்தி களித்திடும் ஆதிக்கமே
கோழையின் நிழலோ கனலாக - மண்ணில்
கோபுரம் வீழ்ந்திடும் சமமாக
வேர்வை நதிகள் வளங்கொடுக்கும் - மண்ணில்
விதியினை வீழ்த்தியே நலங்கெடுக்கும்
தீர்வை உணர்ந்திடும் ஓரணியாய் - மண்ணில்
தீங்கெல்லாம் முறித்திடும் பேரணியே
சீறிடும் செந்நிறம் பாய்ந்தொளிர - நன்றாய்ச்
சிந்தை எழுந்தே ஆய்ந்தொளிரும்
மீறிடும் பழமை மாய்ந்திடவே - ஆங்கே
மீண்டும் புதுமை ஆய்ந்தெழுமே
போரில் தோழமை முழங்கிடுமே - தீமை
புரியும் குறுமனம் கலங்கிடுமே
பாரில் உரிமை தொடுக்கட்டுமே - எங்கும்
பாதகச் செயலை முடிக்கட்டுமே
வஞ்சம் வீழ்ந்திடும் நாளிதுவே - இனி
வாழ்வினில் நிமிர்ந்திடும் சூளுரையே
நெஞ்சில் கொள்கைப் போர்முகமே - இனி
நேர்வது திறனெழும் பார்முகமே!
கவிஞர் தமிழ்தாசன்
உசிலம்பட்டி