சென்னை, மார்ச் 11- அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வக நுட்பனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே சனிக்கிழமை (மார்ச் 11) உண்ணாநிலை போராட்டம் நடை பெற்றது. மாநிலத் தலைவர் மா.செல்வகுமார் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாநிலப் பொருளாளர் நா.சங்கர் வரவேற்றார். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன் துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் வீ.பார்த்தசாரதி, முன்னாள் மாநில நிர்வாகிகள் கோ.பன்னீர் செல்வம் செ.செந்தில் ஆறுமுகம், கோ.சுகுமார். கே.எம்.தியாகராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
போராட்டம் குறித்து பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறுகையில், 11 புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு நிரந்தர ஆய்வக நுட்பனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 15 ஆண்டுகளாக அரசின் பரிசீல னையில் உள்ள முதன்மை ஆய்வக அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், 45 (சிடிஓ) பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிலை 1 உருவாக்கத்தில் உள்ள கோப்புகளை நிறைவு செய்து பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும், ஆய்வக நுட்பனர் நிலை 2 பணியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றவில்லை. இதனால் தற்போது உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எனவே முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.விஜய குமரன், கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா.ராணி, பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.திருமகள், அரசு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் ந.மணிமாலா உள்ளிட்ட பல்வேறு சங்கத் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.