மலப்புரம், நவ. 27 - ஒன்றிய அரசிடம் கேரளம் வலியுறுத்துவது, இலவசத்தையோ கருணையையோ அல்ல, தகுதியான உரிமைகளைத்தான் கேட்கிறோம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது நேரடியாக தீர்வுகாணும் ‘புதிய கேரள அரங்கு’ நிகழ்ச்சி, கேரளத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக, மலப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒன்றிய அரசு பல வழிகளில் கேரளத்தை நிதி ரீதியாக திணறடித்து வருகிறது. ஒன்றிய அரசு வழங்க மறுத்தாலும், கேரளம் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கி வருகிறது. ஒன்றிய அரசு எதைப் புறக்கணித்தாலும், கேரள அரசு தனது நலத்திட்டங்களைத் தொடரும். பல்வேறு துறைகளுக்கு தரவேண்டிய நிதியை ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது.
நிதியை விடுவிக்காததற்கு, புள்ளிவிவரங்கள் வழங்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது. அவ்வாறு அவர் கூறியிருப்பது கவனத்தைத் திசைத்திருப்பும் முயற்சியாகும். கணக்குகள் பொதுப் புள்ளிவிவரங்கள் இருந்தால் வெளியிடலாம். கணக்குத் தணிக்கை (ஏஜி) ஒன்றிய அமைப்பின் கீழ்தான் வருகிறது. மாநில அரசே நேரடியாகக் கொடுக்கக் கூடாது. ஆனால், மாநில அரசின் நியாயமான கோரிக்கைகளை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது. இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார். காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர்கள் ஆதரவு கோழிக்கோடு மாவட்டம் ஓமச்சேரியில் நவம்பர் 26 அன்று காலை நடைபெற்ற கேரள அரங்கு நிகழ்ச்சியின்போது, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்களை யுடிஎப் வசமுள்ள குன்னமங்கலம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி நிலைக்குழு தலைவர் என். அபுபக்கர் சந்தித்தார். அபுபக்கர் காங்கிரஸ் பெருவயல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஆவார். முஸ்லீம் லீக் தலைமையிலான குன்னமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தனது நிதியில் இருந்து, புதிய கேரளம் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ரூ. 1 லட்சம் வழங்கியது. யுடிஎப் விதித்த தடையை மீறி காங்கிரஸ் - முஸ்லிம் லீக் தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.