கரூர், அக்.11 - கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் நிறுத்தப் பட்டுள்ள மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடவூர் வட்டக் குழு சார்பில் மாபெரும் காத்திருப்பு போராட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமை வகித்து உரையாற்றினார். விவசாயத் தொழிலாளர், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் எஸ்.சந்திரன், கே.சக்திவேல், இரா. முத்துச்செல்வன், பி.ராமமூர்த்தி, பி.வேல்முரு கன், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.பழனிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர்கள் பி.வீரமலை, பி.ரவிகண்ணன் உள்பட ஆயி ரத்திற்கும் மேற்பட்ட நூறு நாள் பணி தொழிலா ளர்கள் கலந்து கொண்டனர்.
‘கடன் மேல் கடன் வாங்குகிறோம்’
மாவத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த மணி கூறுகையில், “நூறு நாள் வேலை இல்லாத தால் வாழ்க்கையை நடத்துவதற்கு ரொம்ப கஷ்ட மாக உள்ளது. நாங்கள் கஞ்சி குடிப்பதற்கு வழி யில்லாமல் இருக்கிறோம். இதில் குழந்தை களை எப்படி காப்பாற்றுவது என தெரிய வில்லை, ரேசன் கடையில் இலவசமாக அரிசி வழங்குகிறார்கள், அரிசி மட்டும் இருந்தால் போதுமா, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பணம் வேண்டும். அதற்கு எங்கே போவது, நூறு நாள் வேலையை நம்பித்தான் உள்ளோம். வேலையில்லை, வருமானமும் இல்லை. அத னால் கடன் வாங்க வேண்டியுள்ளது. கடனை வாங்கி வருமானம் இல்லாமல் எப்படி திருப்பி கட்டுவது? கடன் கட்ட வழியில்லாமல் கடன் மேல் கடன் வாங்க வேண்டி உள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கிடைத்தால் மட்டுமே எங்களுக்கு வருமானம். அப்படி இருக்கும் போது, வேலை இல்லாமல் கடனை மட்டும் வாங்கி வைத்துவிட்டு, கடனை கட்ட முடியாமல் முடிவில் நாங்கள் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்” என்றார்.
ஆறு மாதமாக அலைக்கழிப்பு
கீரனூர் ஊராட்சியை சேர்ந்த சிந்து கூறு கையில், “எனக்கு நூறு நாள் வேலைக்கு புதிதாக அட்டை வேண்டி ஆறு மாதத்திற்கு முன்பு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் இன்று வரை அட்டை வழங்கவில்லை. அட்டை வேண்டும் என்று கேட்டால் பஞ்சாயத்து தலை வர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்க சொல்கிறார். அங்கு போய் கேட்டால் ஊராட்சி மன்ற தலைவரையும் செயலரையும் பார்க்க வேண்டும் என கூறி, என்னை கடந்த ஆறு மாத மாக ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என அலைக்கழித்து வருகின்ற னர். எங்கள் பகுதியில் விவசாய வேலைகள் தவிர வேற எந்த வேலையும் கிடையாது. நூறு நாள் வேலை மட்டும்தான் இருக்கிறது. எனவே எங்களுக்கு புதிய ஆட்டை கொடுத்து நூறு நாள் வேலை வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
20 நாள் தான் வேலை
முள்ளிப்பாடி ஊராட்சியை சேர்ந்த மகேஸ்வரி கூறுகையில், “நான் நூறு நாள் வேலை திட்டத்தை நம்பிதான் வாழ்ந்து கொண்டி ருக்கிறேன். நூறு நாள் வேலைக்கு சென்றால் தான் எனது வீட்டில் சமையல் நடக்கும். நூறு நாள் வேலையில் இதுவரை 20 நாள் மட்டுமே வேலை செய்துள்ளேன். கடந்த 6 மாதமாக நூறுநாள் வேலை வழங்காமல் உள்ளனர். இதனால் உணவுக்குகூட வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கடவூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான பி.ராம மூர்த்தி கூறுகையில், “நூறு நாள் வேலையில் ஏரி, குளம் தூர்வாரி ஆழப்படுத்துதல், சாலை யோரத்தில் மரம் நடுதல் உள்ளிட்ட பணிகளை வழங்கினால், தொழிலாளர்களுக்கு அதிக நாட்கள் வேலை கிடைக்கும். அதிக அளவில் பணிகள் வழங்கப்படும். ஆனால் அது போன்ற பணிகளை வழங்காமல் பண்ணை குட்டை, வரப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரு கின்றன. இந்த வேலையில் ஒரு நாளைக்கு 20 பேர் மட்டுமே வேலை செய்யும் நிலை உள்ளது. மீதமுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலையின்றி உள்ளனர்” என்றார். (ந.நி.)