tamilnadu

img

தீக்கதிர் வைரவிழா ( 60ஆம் ஆண்டில் நுழைகிறது பாட்டாளி மக்களின் புரட்சி ஏடு )

மாமேதை மார்க்ஸ் சிலையும் எழுகிறது

மதுரை, ஜுன் 26 - தீக்கதிர் நாளிதழின் வைரவிழா ஜுன் 29 புதனன்று உற்சாகத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மதுரையில் அமைந்துள்ள தீக்கதிர் நாளிதழின் புதுப்பிக்கப்பட்ட தலைமை அலுவலக திறப்புவிழாவும் நடைபெறுகிறது. புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தில் கம்பீரமாக மாமேதை காரல் மார்க்சின் சிலையும் எழுகிறது. ஊடக உலகில் உண்மையின் பேரொளியாகத் திகழும் தீக்கதிர் நாளிதழ் 1963 ஜுன் 29 அன்று கோவை தொழிலாளி வர்க்கம் அளித்த நிதியைக் கொண்டு துவக்கப்பட்டது. 2022 ஜுன் 29 புதனன்று தீக்கதிர் நாளிதழ் தனது 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களான பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வெங்கட்ராமன், ஏ.பாலசுப்பிரமணியம், ஏ.நல்லசிவன், வாழும் வரலாறாகத் திகழும் என்.சங்கரய்யா, கே.முத்தையா, என்.வரதராஜன், ஏ.அப்துல்வஹாப், ஆர்.ராமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் உருவாக்கிய அடித்தளத்தில் நின்று 60ஆண்டு காலமாக தமிழகம் மற்றும் இந்திய அரசியல் அரங்கில் பாட்டாளி வர்க்கத்தின் குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது தீக்கதிர் நாளேடு.  60ஆம் ஆண்டில் நுழையும் தீக்கதிர், தனது வைரவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்களின் தோழமையாலும் வாழ்த்துக்களாலும் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது. 

வைரவிழா துவக்கம்

தீக்கதிர் வைரவிழா துவக்கம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தலைமை அலுவலக திறப்பு, காரல்மார்க்ஸ் சிலை திறப்புவிழா ஜுன் 29 புதனன்று காலை 10 மணியளவில் மதுரை புறவழிச்சாலையில் அமைந்துள்ள தீக்கதிர் வளாகத்தில் நடைபெறுகிறது. புதுப்பிக்கப்பட்ட அலுவலக வளாகத்திற்கு, தீக்கதிரின் நீண்டகால ஆசிரியராக செயலாற்றி அரசியல் அரங்கில் தீக்கதிரை ஒரு புரட்சிகர ஏடாக நிலைநாட்டிய - மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவரான கே.முத்தையா அவர்களது பெயர் சூட்டப்படுகிறது. ‘தோழர் கே.முத்தையா வளாகம்’ என்ற பெயரிலான அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். மாமேதை மார்க்ஸ் சிலையை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைக்கிறார். தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் செங்கொடியை ஏற்றி வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட ஆசிரியர் குழு அலுவலகத்தை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைக்கிறார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், சு.வெங்கடேசன் எம்.பி., கே.பாலபாரதி மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர். கட்டிட புதுப்பிப்பு பணிக்காக நிதி வழங்கிய நன்கொடையாளர்களை தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி கவுரவிக்கிறார். வைரவிழா துவக்க நிகழ்வையொட்டி தீக்கதிர் சிறப்பிதழ் வெளியாகிறது.

சிறப்பு மலர் 

தீக்கதிர் வைரவிழாவையொட்டி, தீக்கதிரின் வரலாறு, தமிழக மற்றும் இந்திய அரசியல் அரங்கில் இடதுசாரி இயக்கம் பதித்துள்ள தடங்கள், பத்திரிகை உலகின் அரசியல் மற்றும் நவீன மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதிக்கும் விதமாக கட்டுரைகள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகள் உள்ளிட்ட அம்சங்களுடன் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சிறப்புமலர் வெளியிடப்படுகிறது. வைரவிழாவையொட்டி கோவை, திருச்சி, சென்னை நகரங்களில் சிறப்பு நிகழ்வுகளையும் நடத்திட தீக்கதிர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.