tamilnadu

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு 8 ஆவணங்களில் ஜெய்சங்கர் கையெழுத்து!

இஸ்லாமாபாத், அக். 16 - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23-ஆவது உச்சி மாநாடு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் அந்நாட்டு தலைநகர் இஸ்லாமாபாத்தில் துவங்கியது. சீனா, ரஷ்யா, பெலாரஸ், ​​கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்களும், ஈரான் சார்பில் அந்நாட்டு துணை ஜனாதிபதியும் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.  பார்வையாளராக மங்கோலியாவின் பிரதமர், சிறப்பு விருந்தினராக துர்க்மெனிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே, மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்தியதற்காக பாகிஸ்தான் அரசை பாராட்டினார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்கான கூட்டு அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு  என்பது பரஸ்பரமான மரியாதை மற்றும் இறையாண்மை  சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம் ஆகிய மூன்றும் ஷாங்காய் கூட்டமைப்பின் முன்னுள்ள முக்கிய சவால்கள் என்றும் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

மாநாட்டின் முடிவில் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற ஆக்கப்பூர்வ உரையாடலை உருவாக்குதல்; உலகளவில் காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாப்பு, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்; சர்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் ஷாங்காய் கூட்டமைப்பின் சாசனத்தின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க நியாயமான மற்றும் சீரான திட்டங்களை செயல்படுத்துதல்; உலக வர்த்தக அமைப்பின் நோக்கமான உலகளாவிய நிலையான வளர்ச்சியைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகள், ஒருதலைப்பட்சமான தடைகள் மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை எதிர்ப்பது; உலக வர்த்தக அமைப்பின் விதிகள் அடிப்படையில், பாரபட்சமற்ற, நியாயமான, வெளிப்படையான பலதரப்பு வர்த்தக அமைப்பை மீண்டும் வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட 8 ஆவணங்களிலும் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கையெழுத்திட்டார். அடுத்த ஆண்டு மாநாட்டை தலைமை ஏற்று நடத்த உள்ள ரஷ்யாவிற்கு இந்தியா சார்பில் தனது வாழ்த்துக்களையும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.