வளைந்து வளைந்து ஓடுவதேன் பெண்ணே?-பூச்சியை
வளைத்துப் பிடிக்க முடியாதடிக் கண்ணே!
எத்தனை நாள்நீ ஓடிடினும் பெண்ணே-அதனை
எட்டிப் பிடிக்க முடியாதடிக் கண்ணே!
பிடித்து நூலைக் கட்டாதே பெண்ணே!-அது
துடிக்கத் துன்பம் தரலாமா கண்ணே?
படிக்கும் போதே அருளதனைக் கொள்வாய்-உயிர்
வடிக்கும் துயரைப் போக்கிநீயே வெல்வாய்!
பசிக்கை யில்நீ உண்பதேனோ பெண்ணே?-சுவைத்துப்
புசிக்கலை யோசொல் உணவதனைக் கண்ணே?
பசிக்குத் தேனைத் தேடுதது கண்ணே;-அதனைப்
புசிக்கத் தடுத்துத் துரத்துவதேன் பெண்ணே?
முற்பகல் நீதீங்கு செய்தால் பெண்ணே -அது
பிற்பகல் வந்து வருத்துமேடி கண்ணே!
நற்செயல் செய்து வாழ்ந்திடுவாய்ப் பெண்ணே!-உன்
சொற்கள் கருணை உரைத்திடுமே கண்ணே!
உயிர்கள் மகிழ உதவிடுவாய்ப் பெண்ணே. --நீயும்
உறவுகள் சூழ உவந்திருப்பாய்க் கண்ணே!
செயல்கள் நல்லதே செய்திடுவாய்ப் பெண்ணே -ஒரு
தீங்கும் உனக்கு வாராதடிக் கண்ணே!