tamilnadu

img

அமெரிக்காவை துணைக்கு இழுக்கும் இஸ்ரேல் மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி போர் பரவும் அபாயம்

அமெரிக்காவை துணைக்கு இழுக்கும் இஸ்ரேல் மத்திய கிழக்காசிய நாடுகளைத் தாண்டி போர் பரவும் அபாயம் 

டெல் அவிவ், ஜூன் 17 - இஸ்ரேல் - ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. இதில், இஸ்ரேல் எதிர்பார்க்காத வகையில், அந்நாட்டுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. யுத்தம் துவங்கி 5 நாட்களைக் கடந்துவிட்ட நிலையில், ஈரானை அச்சுறுத்தி விடலாம் என்ற இஸ்ரேலின் கணிப்பு தவறாகி வருகிறது. இதனால், ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவையும் துணைக்கு இழுக்கும் திட்டத்தை இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது. “இன்று அவர்கள் (ஈரான்) எங்களை தாக்குகிறார்கள். நாளை அவர்கள் அமெரிக்காவையும் தாக்குவார்கள்” என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவை உள்ளே இழுத்து விட்டுள்ளார். அதாவது, அமெரிக்காவும் தங்களோடு சேர்ந்து ஈரானுக்கு எதிராக போரில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பத்தையே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனது நலன்களுக்கு சேவை செய்ய அமெரிக்காவைத் தூண்டி அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் நேதன்யாகு, அமெரிக்கா அதற்கு உடனடியாக இணக்கம் தெரிவிக்காததால் மறைமுகமாக விமர்சிக்கவும் தயாராகி விட்டார். “அமெரிக்காவின் நலன்களே முதன்மை என ஜனாதிபதி டிரம்ப் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அது அமெரிக்காவின் அழிவாக இருந்துவிடக் கூடாது” என்று நேதன்யாகு எச்சரித்துள்ளார். அடுத்த வரியிலேயே, “அமெரிக்கா அழிய வேண்டும் என ஈரான் நினைக்கிறது. அதனால் தான் மனித குலத்துக்கு சேவை (!) செய்யும் அடிப்படையில் இந்த போரை நாங்கள் (இஸ்ரேல்) நடத்துகிறோம், அவர்களை (ஈரானை) தாக்குகிறோம். இது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போர்” எனவும் நேதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை போருக்குள் இழுக்க நேதன்யாகு விரும்புகிறார், என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில நகர்வுகள் அமெரிக்காவிலும் நடந்துள்ளன. இது போர் குறித்தான அச்சத்தை அதிகரித்துள்ளது.  இதே நேரத்தில் ‘ஜி7’ உச்சி மாநாட்டிற்காக கனடா சென்ற டிரம்ப் மாநாடு முடிவதற்கு முன்பாகவே அங்கிருந்து அவசரமாக கிளம்பினார்.  “நான் கையெழுத்திடுமாறு கூறிய ‘ஒப்பந்தத்தில்’ ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். தற்போது மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்றன. இது ஒரு அவமானம். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது. வைத்திருக்க கூடாது” என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், “ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும்” எனவும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனால், அமெரிக்கா நேரடியாக போரில் இறங்கலாம் என்ற அடிப்படையில், 3,30,000-க்கும் மேற்பட்ட மக்கள், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வெளியேறி வருகின்றனர். சீனா கண்டனம் டிரம்பின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையே அதிகரித்து வரும் சண்டையில்  டிரம்ப் மேலும் ‘எண்ணெய் ஊற்றுகிறார்’ என்று சீனா கண்டித்துள்ளது. “இவ்வாறு பிரச்சனைகளில் தீயை மூட்டி, மேலும் தூண்டி விடுவது அதிகரித்து வரும் போரின் தீவிரத்தை தணிக்க உதவாது. மாறாக மோதலை தீவிரப்படுத்தி பரவச் செய்யும்” என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறியுள்ளார். இதன் காரணமாக, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர், மத்திய கிழக்காசிய நாடுகள் மட்டுமின்றி, அதற்கு வெளியேயும் விரிவடையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.