tamilnadu

img

தனியாரிடம் தாரைவார்க்காமல், 4 நிறுவனங்களையும் இணைத்து அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக்கி வலுப்படுத்துக.... ஒன்றிய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., கடிதம்....

மதுரை:
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியாரிடம் தாரைவார்க்காமல், 4  நிறுவனங்களை யும்  ஒன்றாக இணைத்து அரசு பொதுக் காப்பீடுநிறுவனமாக்கி வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், ஒன்றிய நிதிமைச்சர் நிர்மலா சீதாரா மனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: 

பட்ஜெட்டில் ஒரு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாகுமென நிதியமைச்சர் அறிவித்தார். நான்கு அரசு நிறுவனங்களில் எந்த நிறுவனம் என்பதை அவர் அப்போது அறிவிக்கவில்லை. ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் இப்போதும் எந்த நிறுவனத்தை என்று சொல்ல மாட்டேன் என்கிறார்.

இது என்ன ஜனநாயகம்  நிதியமைச்சரே !

என்னிடம் பெயர் கேட்டால் சொல்ல மாட்டேன் என்று நிதியமைச்சர் சொல்லும் போதே, நிதி அயோக் தனது பரிந்துரையை அரசிடம் தந்து விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துவிட்டன.

கசிந்ததா.. கசிய விடப்பட்டதா...

1971 இல் 107 தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டுத்தான் நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதற்கு பிறகு இந்த அரசு நிறுவனங்கள் பொது இன்சூரன்ஸ் பரவலை சிற்றூர்கள், கிராமங்கள் வரை எடுத்துச் சென்றுள்ளன. த‌னியா‌ர் நிறுவனங்களின் அலுவலக அமைவிடங்கள் எல்லாம் அவர்கள் வணிகத்தில் அனுமதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன பிறகும் மெட்ரோ நகரங்கள் அல்லது இரண்டாம் தட்டு நிறுவனங்களை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன என்ற இன்சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (I.R.D.A) 2020 ஆண்டறிக்கை கூட சொல்வது நிதி அமைச்சருக்கு தெரியாத ஒன்றல்ல.

ரூ.12 பிரீமியத்திற்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்குகிற, வங்கி கணக்குகளோடு இணைக்கப்பட்ட ‘பிரதான் மந்திரி சுரக்ச பீம யோசனா’ திட்டத்தை அமலாக்கி வருவது நான்கு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள்தானே!

லாபமா... மக்கள் நலனா என்றால் தனியார்கள் எதை தெரிவு செய்வார்கள்? அரசு நிறுவனங்கள் எதை தெரிவு செய்யும் என்பதற்கு உதாரணங்கள் ஏராளம் உள்ளன.நான்கு அரசு நிறுவனங்கள் தனியார் வசம் போகக் கூடாது. நான்கு நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து ஆயுள் காப்பீட்டில் எல். ஐ. சி இருப்பது போல ஒரே அரசு பொதுக் காப்பீடு நிறுவனமாக உருவாக்கி வலுப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு இதைப் பரிசீலிக்க வேண்டும். ஒன்றிய அரசே... அரசின் நிதித் தேவைகளை ஈடு செய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. அவற்றை செய்ய அரசியல் உறுதி இல்லாமல் அரசு நிறுவனங்கள் மீது கை வைக்காதே!

இவ்வளவு காலம் பங்கு விற்பனைதான்; அரசு நிறுவனங்களாகவே தொடரும் என்று பேசி வந்த அரசாங்கத்தின் உண்மை நோக்கம் இப்போது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.அரசின் கைகளில் 51 சதவீத பங்குகள் இருக்கும் வரை ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடி இட ஒதுக்கீடுகள் தொடரும். ஆனால் தனியார்மயம் என்றால் சமூக நீதியும் சேர்ந்து பலியாகும். இட ஒதுக்கீடு இருக்காது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே முதல் இலக்காக இருக்கும் என்று செய்திகள் வருவதும், அரசோ நிதி ஆயோக்கோ மவுனமாக அந்த செய்தி பரவ அனுமதிப்பதும் அதிர்ச்சி தருகிறது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தமிழ் நாட்டில், சென்னையில், தலைமையகம் கொண்ட நிறுவனம். அதனால் அது அகிலஇந்திய நிறுவனம் எ‌ன்றாலு‌ம் அதன் சேவை இயல்பாகவே தமிழ் நாட்டையும், தென் மாநிலங்களையும் சுற்றி அதிகமாக அமைந்திருக் கிறது. தமிழ்நாடு முதல்வர் காப்பீடு திட்டத்தை இதுவே நிர்வகித்து வருகிறது.

தமிழ்நாடு சோதனைக் களமா?
நான்கு அரசு பொது நிறுவனங்களும் அரசின் கைகளிலேயே தொடரட்‌டும்! தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்படவேண்டும் என நிதி அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளேன்.மக்கள் நலனையும், தமிழ் நாட்டை த‌லைமை இடமாகக் கொண்டு இயங்குகிற ஒரு அரசு நிறுவனத்தையும், சமூக நீதியையும் காவு கேட்கிற இந்த தனியார்மய நகர்வை தமிழ்நாடு எதிர்க்கும். மும்பை, தில்லி, கொல்கத்தாவை தலைமை இடங்களாகக் கொண்ட
அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் காத்து நிற்கும். தேசத்தி‌ன் குரலை ஒன்று திரட்டுவதிலும் முன் நிற்கும்.இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்த ஊழியர்கள்
முன்னதாக ஜூலை 15 வியாழக்கிழமையன்று, அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று நாடாளுமன்றக் கூட்டத்தில் குரல் எழுப்பக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.ஒன்றிய அரசு “STRATEGIC SALE” என்கிறவகையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளையும் ஒரு அரசு பொது காப்பீட்டு நிறுவனத்தையும் 100 சதவீதம் முழுமையாக தனியாருக்கு விற்பது என்ற முடிவினை எடுத்துள் ளது. கடந்த 2021 பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமன்  இதனை தெரிவித்துள்ளார். தற்சமயம் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் அரசு பொது காப்பீட்டு நிறுவனத்தை தேசிய மயத்திலிருந்து 100 சதவீதம் முழுமையாக தனியாருக்கு விற்பனை செய்ய நிதி ஆயோக் அமைப்பின் உயர்மட்டக்குழு முடிவினை எடுத்துள்ளது. 

இதனைக் கண்டித்து நாடு முழுவதும் அகில இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாகவும், அதிகாரிகள் சங்கத்தின் சார்பாகவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களையும், மாநிலங்களவை உறுப்பினர்களையும் சந்தித்துபொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது என்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஒன்றுபட்டு இப்பிரச்சனையை  எழுப்பக்கோரி நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் என்பது கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது.  

இந்தியா முழுவதும் இவ்வகையாக சந்திப்பு நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் அதன் ஒரு பகுதியாக ஜூலை 15 வியாழக்கிழமையன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் புஷ்பராஜ், ரமேஷ், யுனிடெட் இண்டியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆனந்தராஜ், எஸ்.ஆர்.கண்ணன், டி.கண்ணன், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க நிர்வாகி ரமேஷ் கண்ணன் ஆகியோர்  இணைந்து 50-க்கும் மேற்பட்ட தோழர்களுடன் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர்.

;