tamilnadu

img

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை மாவட்டம்.... தமிழக முதல்வருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்....

மதுரை:
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப் படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்றுஇந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
 காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலைஉறுதிசெய்வதற்கான தசாப்தமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி,  மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தகாலமாக இந்த காலம் இருக்கிறது.இந்தக் காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளை செய்யும் தங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “இந்திய வானிலை துறையின்  (Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State) ஆய்வு அறிக்கை  வெளிவந்துள்ளது.இந்த அறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படப் போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரியவருகிறது.

மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்யும் மழை அளவு குறைந்து வருகிறது என்றும் அறிக்கை கூறுகிறது.இதில் வருடாந்திர சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகிற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரை என்கிறது இந்த ஆய்வு. ஒவ்வொரு மாதமும் பெய்யும் மழை அளவைக் கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக  மதுரை உள்ளதாகக் கூறுகிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு. அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் (Dry days) எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது.
இவற்றைக் கணக்கில் கொண்டு நிகழவிருக்கும் ஆபத்தைத் தடுக்க கீழ்கண்ட முன்னெடுப்புகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

•    மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33 சதவீதமாக  அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கவேண்டும். 

    ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். அக்காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். 

•    மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்கு தூர்வார வேண்டும். 

•    வைகையின் பிறப்பிடமான மேற்கு மலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும். 

•    வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும்.

•    மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசைக் குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

;