மதுரை:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 60). இவர் அதே பகுதியில் சிமெண்டு கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் சிவலிங்கத்திற்கும், கடைக்கு வந்தவருக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைக்கு வந்தவர் ஆத்திரமடைந்து சிவலிங்கத்தை கத்தியால் குத்தியுள்ளார். அப்போது கடைக்குவந்த சிவலிங்கத்தின் மனைவி சரோஜா (55), மகன் சிவக்குமார் (28) ஆகியோர் கத்திக்குத்தை தடுக்க முயன்றனர்.
இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கத்திக்குத்தை தடுக்க முயன்று காயமடைந்த சரோஜா, சிவக்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சிவக்குமாருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும், அவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடுஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் சிவக்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி குடும்பத்தினரிடம் முன்விரோதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த நிலையில் தான் சிவலிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட சிவலிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராவார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ப.ரவிச்சந்திரன்,மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.