tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்கள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்  தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்கள்

தமிழகத்தில் மும்மொழி கொள்கை தேவையில்லை என இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஒன்றிய அரசின் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட இல்லை என திமுக எம்.எல்.ஏ. எழிலன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தகவல் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்த தகவல் மூலம், தமிழக மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், தாய்மொழி தமிழை கற்றுக்கொடுக்க ஒரு ஆசிரியர்கூட அந்த பள்ளிகளில் இல்லை. அதேவேளையில், மிகவும் சொற்பமான நபர்கள் மட்டுமே பேசுவதாக ஆய்வறிக்கைகள் கூறும் சமஸ்கிருதம் மொழியை பயிற்றுவிக்க 15 ஆசிரியர்களும், இந்தி மொழியை பயிற்றுவிக்க 52 ஆசிரியர்களும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இருப்பது உறுதியானது. இது, ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு ஒரு உதாரணம் என திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை ஒப்பந்த முறையில் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியானது. அதன்படி தமிழ் உட்பட பல்வேறு பாடங்களுக்கும், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கும் கடந்த மாதம் 24 ஆம் தேதி நேரடி நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கேந்திரியா வித்யாலயா பள்ளி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றைய (மார்ச் 2)செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.