tamilnadu

img

சங்க இலக்கியத்தில் வானிலையியல் காலநிலையியல்

டாக்டர் பாலசுப்பிரமணியன்
வானிலை(weather), கால நிலை (climate) பற்றிய அறிவியல் பல துறைகளோடு தொடர்புடைய ஓர் அறிவியல் துறையாகும்.  வானிலையியல் (Meteorology) காற்று, மேகங்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றி ஆய்வு செய்கையில் இயற்பியலோடும் பசுங்குடில் வாயுக்கள் ஏற்படுத்தும் விளைவு கள் பற்றி ஆய்வு செய்கையில் வேதியலோ டும் வானிலை, காலநிலை மாற்றங்களால் தாவரங்களும் உயிரினங்களும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதனை ஆய்வு செய்கையில் தாவரவியல், உயிரியல் துறை களோடும் எனப் பல்வேறு அறிவியற் துறை களோடு தொடர்புடையது.

வானிலைக் கூறுகள்
ஓரிடத்தின் வானிலையைப் பாதிக்கும் வானிலைக் கூறுகளில் முக்கியமானது காற்றாகும். காற்று ஈரப்பதத்தையும் மழை யையும் கொண்டுவருகிறது. காற்றிற்கு அடுத்த நிலையில் மழை முக்கியக் கூறா கிறது. மழையைத் தருவது மேகங்களே. மேகங்கள் மழையைத் தருவதோடு மட்டு மல்லாமல் மழையில்லாக் காலங்களில் வெயிலில் இருந்து நமக்கு இதந்தருகிறது. இத்தகைய வானிலைக் கூறுகளின் தொகுப்பே காலநிலை. சங்க இலக்கியம் கூறுகின்ற செய்திகள் அனைத்தும் முதல், கரு, உரி என்னும் மூன்று பொருட்களின் அடிப்படையில் அமைந் துள்ளன. வானிலை உட்பட இந்த உலகில் உள்ள எல்லாம் இம்முப்பொருளில் அடங்கும் என்பதனை சங்க காலப் புலவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். வானிலை மக்க ளின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. இதனை,

உருமிடைக் கடிஇடி கரையும் பெரு மலை         நாடனைப் பற்றியும்
ஊகம் பார்ப்போடு பனிப்ப, பனிமழை பொழிந்த சாரலைப் பற்றியும்
பனியிருஞ்சோலை பற்றியும்
பெயல கடுநீர் வரித்த செந் நிலமருங்கு பற்றியும்
பாடுகின்ற சங்கப் புலவர்களின் பாடல் களிலிருந்து நாம் அறிய முடிகிறது. மேலும் புலவர்களின் வானிலை பற்றிய நுணுக்க மான கண்ணோட்டமும் இப்பாடல்களி லிருந்து நமக்குப் புலப்படுகிறது.

காற்று
காற்று எத்திசையிலிருந்து வீசுகிறது என்பது வானிலை முன்னறிவிப்பில் ஓர் முக்கிய தகவலாகும். சென்னை போன்ற கடற்கரை நகரில் கிழக்கிலிருந்து காற்று வீசும்போது மழைபொழியவும் மேகங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. சங்க இலக் கியப் புலவர்கள் காற்று எத்திசையிலிருந்து வருகிறது என்பதன் முக்கியத்துவத்தை அறிந் திருந்தனர். ஆகவே கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளிலிருந்து வீசும் காற்றிற்கு முறையே கொண்டல், கோடை, வாடை, தென்றல் எனப் பெயரிட்டிருந்தனர். காற்றிற்கு அசாதாரண வலிமை உண்டு என்பதனையும் அவர்கள் அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்களில் காணப்படும் காற்று பற்றிய செய்திகள் பதினெட்டு பத்தொன்ப தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ள ப்யூபோர்ட் அள வையில் (Beaufor Scale) காற்றின் வலிமை யைக் கண்டறியும் வகையில் கொடுக்கப் பட்டுள்ள வெவ்வேறு குறியீட்டு எண்களு டைய நிலைகளுக்கான இயற்கைச் செயல் பாட்டு விவரங்களோடு ஒப்பிடும் வகையில் உள்ளன. எடுத்துக்காட்டாக ப்யூபோர்ட் எண் (6) குறிப்பிடும் நிலையில் பலமான காற்று பெருங் கிளைகளைச் சலனமடையச் செய்யும். தந்திக் கம்பங்களின் ஊடே காற்று வீசுகை யில் ஒலி ஏற்படுகிறது. கடலில் பெரு அலைகள் எழுகின்றன. வெண்நுரைப்பட லம் ஏற்படுகிறது. நீர்ச் சிதறல் அதிகரிக் கிறது. காற்றால் ஏற்படும் ஒலி பற்றிய குறிப்பொன்றினை ஔவையார். பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்

 (புறம் 89:8-9)
எனப் புறநானூற்றில் பொதுவிடத்தில் தொங்குகின்ற முழவினிடத்துக் காற்று
மோதி ஓசை எழுப்புதலைக் குறிப்பிடுகிறார். பலமான காற்றினால் வில்லால் அடிபட்ட பஞ்சு போல அலைகள் பிசிர்களைப் பரக்கச்
செய்யுமாறு எழும்பும் அலைகள் பற்றி,
வில் எறி பஞ்சி போல மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனோடு நகாஅ ஊங்கே 
நற் 299/8
என நற்றிணையில் நெய்தல் நிலப் பாடலொன்றில் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் குறிப்பிடுகிறார்.

மழை:
மழை உருவாகும் இயற்பியல் அடிப் படையை விளக்கும் வண்ணம் கடல் நீரை முகந்து கொண்டு மேகங்கள் உருவாவது பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக குறிஞ்சிப்பாட்டில் கபிலர் நீர் நிறைந்த கடலின் நீர் குறைபடும்படி முகந்துகொண்டு மெலிதாக இடித்து முருகனின் வேல் போல மின்னி மலைமிசைப் பொழிந்த மழையைப் பற்றி,

நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு
அகல் இலு வானத்து வீசுவளி கலாலின்
முரசு அதிர்ந்தென்ன இன்முரல் ஏற்றோடு
நிரைசெலல் நிவப்பின் கொண்மூ மயங்கி
இன் இசை முரசின், சுடர்ப்பூண் சேஎய்
ஒன்னார்க்க ஏந்திய இலங்கீலை எ /கின்
மின்மயங்கு கருவிய கல்மிசைப் பொழிந்தென 
கு பா 47/53
எனக் குறிப்பிடுகிறார்.

புறநானூற்றில் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடிய பாடலில் “குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்” (புறம் 6/4) என்று பாடுகிறார். மேற்கில் உள்ள அரபிக் கடல் மிகப் பழைய கடல் எனக் குறிப்பிடுவது காலநிலை பற்றிய அரியதோர் குறிப்பல்லவா ? இடிமழை பற்றிய தெளிவான வருண னைகள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப் படுகின்றன. இடிமழை நேரத்தில் வெப்ப நிலை திடீரெனக் குறையும்; பெருந்துளி மழை பொழியும் ஆகிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. பல்வேறு மழைகள் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் காணப்படு கின்றன.  இடிமழைக்கு ஆலம்பேரி சாத்தனாரின் அகநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். பிரிவினால் வாடும் தலைவி தோழிக்குத் தலைவன் தன் கைபற்றிச் சூளுரைத்து வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்துவிட்டது.ஆயினும் தலைவன் இன்னமும் வரவில்லையே என்று கூறும் பாடலான,

கால்இயல் நெடுந்தேர்க் கைவண் செழியன்
ஆலங் கானத்து அமர்கடந்து உயர்த்த
வேலினும் பல்ஊழ் மின்னி, முரசுஎன
மாஇரு விசும்பில் கடிஇடி பயிற்றி,
நேர்கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
போர்அடங்கு அகலம் பொருந்திய தார்போல்
திருவில் தேஎத்துக் குலைஇ உருகெழு
மண்பயம் பூப்ப பாஅய்,
தண்பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
அகம் 175/0-18
பாண்டியனின் வாள் போல மின்னி, அவன் வெற்றி முரசு போல் இடித்து, திருமால் மார்பில் அணியும் மாலை போல் வான வில்லைத் தோற்றுவித்த குளிர் மழை என ஆலம்பேரி சாத்தானார் இடிமழை பற்றி அழகாகப் பாடியுள்ளார்.

மேகங்கள், காலநிலை
மேகங்கள் தொடர்பாகவும் சங்க இலக்கியங்களில் பல அறிவியற் செய்திகள் காணக்கிடைக்கின்றன. மேகமற்ற வானம், புகை, பஞ்சு, யானை போன்ற மேகங்கள், தொங்கும் பைகளுடைய மேகங்கள், பருவ கால மேகங்கள் ஆகியன பற்றி சங்க காலப் புலவர்கள் அறிந்திருந்தனர். காலநிலையியல் செய்திகள் பற்றி நோக்குகையில் கோடைக்குப் பின்னர் கார் காலம் வருதல், கார்காலத்திற்குப் பின் கூதிர், முன்பனிக் காலங்கள் வருதல், கார்காலத்தில் வழக்கமாகப் பெய்யும் மழை, இளமழை, பழமழை காலவரிசையில் இளவேனிற் காலம், ஆகியவை பற்றி சங்க இலக்கியப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. முதுவேனிற் காலத்தின் கோடை வெப்பம், அக்காலத்தில் இலையுதிர் காடுகளின் நிலை, மிருகங் களின் நீர்வேட்கை, முதுவேனிற் காலம் நீண்டது பற்றிய குறிப்புகள், கோடையில் இயற்கையில் ஏற்படும் நிகழ்ச்சிகள், கோடை மழை, காட்டுத்தீ, வெப்பத்தால் புழுதி பரவு தல், கானல் நீர் ஆகியன பற்றிய செய்தி கள் இக்காலத்திய நிகழ்ச்சிகளோடு ஒப்பிடத் தக்க வகையில் உள்ளன. மேலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை ஆகிய ஐந்திணை நிலப்பாகுபாடு கொப்பனின் கால நிலை மண்டலங்களின் வகைப்பாடோடு ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது. எனவே பண்டைத் தமிழர் வானிலை பற்றிய அறிவு கொண்டவராய் இருந்தனர் என்பது அக்கால இலக்கியங்களில் இருந்து அறிய முடிகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் இச்செய்திகள் இக்காலத்து வானிலை இயல் கருத்துக்களுடன் ஒப்பிடத் தக்க வகையில் உள்ளன.

 நன்றி: சிறகு, வாரஇதழ்