tamilnadu

img

பல் போனாலும், இந்த “சொல்” போகாது..!! - கணேஷ்

“சார்... பல் போனா சொல் போகும்தான சார்.”
“இத எங்க படிச்ச.”
“வீட்ல ஒரு பழமொழி புத்தகம் இருக்கு சார்.”
“உண்மைதான்... அது ஏன் அப்புடி சொன்னாங்க..?”
“எங்க பாட்டி வீட்ல இருக்காங்க... பல்லெல்லாம் போச்சு.. அவங்க பேசுறது பாதி புரியறதுல்ல சார். சரியாத்தான் சொல்லிருக்காங்க.”
“சார்.. எங்க தாத்தாவுக்கு பல்லெல்லாம் போச்சு.. ஆனா, பல்லு கட்டிருக்காரு... போன சொல்லு வந்துருச்சு சார்.. கட்டலேனா அவரு பேசுறதும் புரியாதுதான்”
“ஆமா.. பேசுறப்ப நம்ம குரல்வளைலருந்து வர்ற காற்று, பற்களோட இடுக்குகள்ல மோதி குரலாக ஒலிக்குது. நுரையீரல்லருந்து மூச்சுக்காற்று எழும்பி, குரல் நாண்கள்லாம் ஒண்ணோடு ஒண்ணு இணையுறப்ப ஏற்படுற அதிர்வுதான் நம்ம குரல்.”
“பாட்டுப் பாடுறது எப்புடி சார்..?”
“அந்தக் காத்து கழுத்துக்கு வர்றப்ப மூளைலருந்து சிக்னல் கிடைக்கும். அது போடுற உத்தரவுப்படி பல், உதடு, நாக்கு, மூக்கு எல்லாம் செயல்பட ஆரம்பிச்சுரும்.. அதனாலதான் பாடலா வருது. ஆனந்த யாழை மீட்டுகிறாய்னு கிறங்கடிக்குதே..”
“மூளையோட இந்த செயல்பாடு இல்லேங்குறதுனாலதான் விலங்குகள், பறவைகள்லாம் பேசுறது, பாடுறது இல்லையோ சார்.”
“பறவைகளுக்கு பல்லே கிடையாதே.”
“ஆமால்ல.. சார், ஆனா டைனோசர்லருந்துதான பறவைலாம் வந்துச்சு.”
“ஆமா.. டைனோசருக்கு பல் இருந்துச்சு.. பறவைங்களுக்கு இல்லாம போச்சு.”
“ஆனா, எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற மரத்துக்கு நிறைய பறவைகள் ராத்திரி வரும். அதுஙக குடுக்குற சத்தம் நல்லாருக்கும் சார்.”
“அவங்களுக்கு வீடே மரங்கள்தான... தமிழ்நாட்டுல 583 வகையான பறவைங்க இருக்காம். ரீங்காரச்சிட்டுனே ஒரு பறவை இருக்குதே.”
“சார், எனக்குத் தெரியும்.. Humming Birdதானே.”
“ஆமா.. அதுக்கு இன்னோரு வித்தியாசமான திறமை உண்டு.”
“சார்.. நான் படிச்சுருக்கேன். பின்னோக்கியும் பறக்கும்.. சரியா சார்..?”
மாணவர் ஒருவர் குறுக்கிட்டார், “நம்ம குரலும் அப்புடியே இருக்குறதில்லயே சார்... நான் சின்ன கிளாஸ்ல பேசுன மாதிரி இப்ப பேசலை.”
“கோடு போட்ட மாதிரி மீசை கூட உனக்கு வர ஆரம்பிச்சுருச்சே.. குரல் நாண்கள் நீளமாகி, விரிஞ்சு, குரல் மாறிடும்.”
“எங்களுக்கு அப்புடி மாறுறது இல்லையே சார்,” -மாணவிகள்
“ஆமா.. பதின்பருவம் வர்ற வரைக்கும் ஒரே மாதிரிதான்.. உங்களுக்கு மட்டும் அந்தக் குரல் நாண்கள்லாம் புடிச்சு வெச்ச மாதிரி அப்புடியே இருக்கும்.”
“சார்.. ஒரு அண்ணா இப்ப கூட பழைய குரல்லதான் பேசுறாங்க. பொண்ணு பேசுற மாதிரியே இருக்கும்.”
“நாண்கள் வளர மறந்துருக்கும்.. இப்பலாம் மருத்துவ சிகிச்சை வளந்துருச்சு.. அறுவை சிகிச்சையோட, பேச்சுப்பயிற்சியும் எடுத்தா உங்கள மாதிரியே “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”னு சவுண்டு விடலாம்”
“ஆனா, நீங்கள்லாம் கொஞ்சம் கம்மியாதான் சவுண்டு விடணும் சார். குரல் நாண்கள்ல கட்டி வர்ற வாய்ப்புள்ளவங்க பட்டியல்ல ஆசிரியர்கள்னு போட்டுருந்துச்சு சார்.”
“உண்மைதான்.. ஆனா, அதுக்கு மருந்து இருக்கு. புற்றுநோய்தான் வரக்கூடாது. 95 விழுக்காடு குரல்வளைப் புற்று, சிகரெட் பிடிக்குறதுனாலதான் வருது”
“ஆனா, சினிமாவுல அத கெத்தா இருக்குற மாதிரில காட்டுறாங்க.”
“அதுல என்ன கெத்து.. நான் நல்லா படிச்சேன்.. இதோ என்னவாயிருக்கேன் பாருங்கனு சொல்றது கெத்தா... இல்லேனா சிகரெட் பிடிச்சு புற்று வந்துருக்குனு சொல்றதா.”
“சார்.. ஒரு நியூஸ் படிச்சேன். ஒருத்தர் வரதட்சணையா 100 பாக்கெட் சிகரெட் வாங்குனாராம்.”
“வரதட்சணையே தப்பு.. இதுல 100 பாக்கெட் சிகரெட்டா..?”
“ஆமா சார்... சட்டப்படி வாங்குறது தப்பு. வரதட்சணை தடுபபு சட்டம், 1961னு படிச்சோம் சார்.”
“ஆனா, வரதட்சணை வாங்குறது, குடுக்குறது இன்னும் நிக்கலையே..? நீங்களாவது நிறுத்த முயற்சிப்பீங்களானு தெரில.”
“நாங்கள்லாம் வரதட்சணை வாங்க மாட்டோம் சார்.”
“சார்... நாங்க தர்றதா இல்ல.” - மாணவிகள்
“பல் போனாலும், எங்களோட இந்த சொல் போகாது சார்.” - கோரசாக.