பிரான்ஸின் பாரீஸ் நகரம் அருகே உள்ள கூப்வெரி கிராமத்தில் 1809 ஜனவரி 4 இல் பிறந்தவர் லூயி பிரெய்ல். இவர் பார்வை யற்றோர் படிக்க உதவும் பிரெய்ல் எழுத்துமுறையைக் கண்டறிந்தவர். இவரது தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். 3 வயது குழந்தையாக இருந்த லூயி, தந்தையின் பட்டறையில் ஊசியை வைத்து விளையாடி போது, அந்த ஊசி கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது. முறையான சிகிச்சை பெறாததால் இரு கண்களிலும் பார்வை பறிபோனது. அப்போதிருந்து தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் கேட்டு, தொட்டு, முகர்ந்து உணர்ந்து அவை பற்றி அறிந்து கொண்டார். 10 ஆவது வயதில் பார்வையற்றோருக்கான உலகின் ஒரே பள்ளியான ராயல் இன்ஸ்டிடியூட் ஃபார் பிளைண்ட் யூத் அமைப்பில் சேர்க்கப்பட்டார். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கேற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. இப்பள்ளியில் படித்த போது, புதிய அனுபவங்களினால் உற்சாகமாக திகழ்ந்தார் லூயி. அப்போது, ராணுவத் தளபதி சார்லஸ் பார்பியல் உருவாக்கிய ‘நைட் ரைட்டிங்’ (போர்க்களத்தில் ராணுவத்தினர் இரவு நேரத்தில் ரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்துவது)என்ற முறையைப் பற்றி தெரிந்து கொண்டார் லூயி. இதன் எழுத்துமுறை 12 புள்ளிகளைக் கொண்டிருந்தது. பின்பு, அப்பள்ளியில் மாணவர் களுக்கு இந்த முறையைப் பின்பற்றி கற்பிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எளிதாகவும், வேகமாகவும் பயில ஒரு புதிய முறையை உருவாக்க எண்ணினார் லூயி பிரெய்ல். இரவும் பகலும் உழைத்து ஆராய்ச்சியில் இறங்கிய லூயி, புள்ளிகளை பலவிதமாக மாற்றியமைத்து, பரிசோத னைகள் செய்து புதிய குறியீட்டு மொழியை உருவாக்கினார். ஆறு புள்ளிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த மொழியில் பாடங்கள், சூத்திரம், அறிவியல் கோட்பாடு, கணக்கு, இசைக் குறிப்பு, கதை, கட்டுரை, நாவல் என அனைத்தையும் எழுதலாம், படிக்கலாம். இந்த அற்புதத்தை நிகழ்த்திய போது அவருக்கு வயது 20.