tamilnadu

img

வறுமையின் கோரப்பிடியில் கைத்தறி நெசவாளர்கள் கண்டுகொள்ளாத கைத்தறி நிர்வாகங்கள் தலையிடுமா தமிழக அரசு?

இராஜபாளையம் பகுதியில் சேத்தூரில் ஆர்ஹெச்148 மேட்டுப்பட்டி சேத்தூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சொக்கநாதன்புத்தூர் புனல்வேலி முத்துசாமிபுரம் மற்றும் சத்திரப்பட்டி ஆர் 90 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனைச் சங்கம் உள்ளிட்ட ஆறு கைத்தறி நெசவாளர் சங்கங்கள் இராஜபாளையம் வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கங்களில் முக்கியமாக காடாபீஸ் உற்பத்தி நடைபெறும். 

கொரனோ ஊரடங்கை ஒட்டி சங்கங்கள் சில நாட்கள் மூடப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன. சங்கங்கள் இயங்கினாலும் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்குகாடாபீஸ் துணி தயாரிப்பதற்கு அரசு தரப்பில் நூல் வழங்கப்படுவதில்லை. இதனால் சங்க உறுப்பினர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலைமை கைத்தறி நெசவாளர் சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ளது.  ஏற்கனவே சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட காடாபீஸ் துணிகள் அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்படாததால் சங்கங்களில் தேங்கிக் கிடக்கின்றன. ஒருபுறம் அரசு கொள்முதல் செய்யாததால் சங்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே தயார் செய்து கொடுத்த துணிக்கு உரிய கூலி வழங்கப்படவில்லை.

சம்பளம் வழங்காத நிலையில் தொடர்ந்து வேலையும் வழங்கப்படவில்லை. அரசு நூல் வழங்காததால் சங்க உறுப்பினர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று சங்கத்தின் தலைவரும் செயலாளரும் கூறுகின்றனர். இதனால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.  தற்போது கைத்தறி நெசவாளர்களுக்கு உரிய கூலியும் காடாபீஸ் தயாரிப்பதற்கான நூலும் அரசு வழங்கவில்லை எனில் கொரோனாவால் ஏற்படக் கூடிய இறப்பை விட கைத்தறி நெசவாளர்களின் பட்டினிச் சாவு அதிகரிக்கும். ஏற்கனவே உரிய வேலை வழங்காததாலும் செய்த வேலைக்கான கூலி கொடுக்கப்படாததாலும் கைத்தறி நெசவாளர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருந்தனர். தற்போது மேலும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆர் ஹெச் 148 மேட்டுப்பட்டி சேத்தூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் அதன் தலைவர் மருது கூறும்போது, எங்கள் சங்கத்தில் 230 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது அரசு முறையாக நூல் வழங்காததாலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கடாபீஸை கொள்முதல் செய்யாததாலும் சங்கம் கடும் நெருக்கடியில் உள்ளது.

சங்க உறுப்பினர்களுக்கு உரிய கூலியை வழங்க முடியவில்லை. புதிதாக அவர்களுக்கு வேலையும் வழங்க இயலவில்லை கைத்தறித்துறை நிர்வாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நூல் வழங்கவில்லை. கொள்முதல் செய்யவில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு கூலியும் வேலையும் வழங்க முடியவில்லை. தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நூல் வழங்குவதற்கும் கொள்முதல் செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது சங்கம் மட்டுமன்றி இராஜபாளையம் வட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி நெசவாளர் சங்கங்களிலும் கொள்முதல் செய்வதோடு நூல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். இராஜபாளையத்தில் 8க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் சங்கங்கள் உள்ளன எல்லா சங்கங்களிலும் இதே நிலைதான். தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் கூட்டுறவு சங்கங்கள் காடா பீஸை கொள்முதல் செய்து நூல் வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.