tamilnadu

img

ஆப்பிரிக்காவில் வளரும் பிரெஞ்சு எதிர்ப்பு!

வடக்கு செனகல், தெற்கு மவுரிடேனியா, மத்திய மாலி, வடக்கு பர்கினோ பாஸோ, தெற்கு அல்ஜீரியா, தென்மேற்கு நைசர், வடக்கு நைஜீரியா ,மத்திய சாட், மத்திய சூடான், வடக்கு எரிட்டீரியா ஆகிய 10 நாடுகளின் பிரதேசம் ‘சாகெல் பிராந்தியம்’ என அழைக்கப்படுகிறது. அட்லாண்டிக் கடல் முதல் செங்கடல் வரை 5 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள  ஆப்பிரிக்க பிராந்தியம் இது. இப்பிராந்தியத்தில் பல நாடுகள் முன்னாள் பிரெஞ்சு காலனிகள். இந்த பிராந்தியத்தில் அடிக்கடி நிகழும் ராணுவ மோதல்கள், வறுமை, காலநிலை மாறுதல், உணவுப் பாதுகாப்பின்மை, அரசியல் ஸ்திரமின்மை காரணமாக மிக அதிக அளவில் மனிதாபிமான உதவிகள் மக்களுக்கு தேவைப்படுகின்றன. 2021ல் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் காலராவினால் பாதிக்கப்பட்டனர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மஞ்சள் நோய் பரவியுள்ளது. பிரான்ஸ் தனது ராணுவத் தலையீடுகள் மூலம் சாகெல் பிராந்தியம் மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சீர்குலைவு வேலைகளை செய்து வருவதால் பிரெஞ்சு எதிர்ப்பு மனோபாவம் இம்மக்களிடையே வளர்ந்து வருகிறது .

நேட்டோ படைகளும் பிரெஞ்சுப் படைகளும் வடக்கு ஆப்பிரிக்காவின் லிபியா மீது 2011ல் யுத்தம் தொடுத்தன. 2020 ஆகஸ்டில் மாலியில் சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு, 2022 செப்டம்பரில் பார்க்கினோ  பாஸோவில்  சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு உட்பட இரண்டு ஆண்டுகளாக பல சதிகள் நிறைவேறின.  கினி நாட்டில் 2021 செப்டம்பரிலும், மாலி நாட்டில் 2020 ஆகஸ்ட், 2021 மே மாதத்திலும் ,2022 ஜனவரியில் பர்கினோ பாஸோவிலும் ஆட்சிக்கு எதிராக சதிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், பிரான்சின் ராணுவ முகாம்களை மாலியின் ராணுவ தலைவர்கள், 2022 மே மாதம் அகற்றினார்கள். பிரான்சுக்கு எதிராக மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.  மொராக்கோ  மற்றும்  அல்ஜீரியாவிற்கு பிரான்சின் ஜனாதிபதி இமானுவேல்  மக்ரான் 2022 ஆகஸ்டில் பயணம் செய்த போது மக்கள் அவரை கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்த உணர்வு பரவி வருகிறது.