ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அரசியல் படிக்க புறப்பட்டுவிட்டார் பாஜக தலைவர் அண்ணாமலை. ஆக்ஸ்போர்டு அகராதியிலேயே இவர் கற்றுக் கொள்ள வேண்டிய வார்த்தைகள் நிறைய உண்டு. கண்ணியம், தன்னடக்கம் போன்ற வார்த்தைகளுக்கான பொருளை 20ஆயிரம் புத்தகங்களை படித்து முடித்த இவர் கற்க வேண்டி உள்ளது.
புறப்படுவதற்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த என்னுடைய விமர்சனத்தில் மாற்றம் இல்லை என்று சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டிருக்கிறார். அப்படி இவர் எடப்பாடி பழனிசாமியை என்ன விமர்சித்தார் என்று பார்த்தால் தற்குறி, தவழ்ந்து சென்று பதவியைப் பிடித்தவர், டெண்டர் மூலம் முதல்வர் பதவியை அடைந்தவர் என்றெல்லாம் எடப்பாடியாரை இவர் ஏசியுள்ளார்.
பதிலுக்கு அதிமுகவினர் பல இடங்களில் இவரது உருவப்பொம்மையை எரித்துக்கொண்டிருப்பதோடு கடுமையான வார்த்தைகளாலும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏழு பக்கங்களில் எழுதி வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து அண்ணாமலையை திட்டித் தீர்த்திருக்கிறார். ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி, துப்புக்கெட்டவர், பச்சைத்துரோகி என்றெல்லாம் சொல்லியுள்ளதோடு கழுதையாகக் கத்தினாலும் தமிழ்நாடு மக்கள் உங்களை ஏற்கமாட்டார்கள். கடல்வற்றி கருவாடு திங்கலாம் என்று காத்திருந்த கொக்கு, கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல என்ற சொலவடைகளையும் அள்ளிவீசியுள்ளார். டெண்டர் கட்சி என்று அதிமுகவை விமர்சித்ததற்கு உங்கள் கட்சியில்தான் மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் அடைக்கலமாகி உள்ளனர் என்றும் உதயகுமார் கூறியுள்ளார்.
அண்ணாமலை தனது கட்சிக்கூட்டத்தில் பேசும் பொழுது 2019ஆம் ஆண்டில் வாரணாசித் தொகுதியில் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்த போது, “நீங்களும் வாங்கண்ணா போகலாம் என்றேன். அதற்கு எடப்பாடி தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வரவேண்டும்” என்று கேட்டார் என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பத்திரிகையாளர் குபேந்திரன், அண்ணாமலை 2019ஆம் ஆண்டில் காவல்துறை அதிகாரியாகத்தான் இருந்தார். அப்போது எப்படி இவர் வேட்புமனு தாக்கலுக்கு எடப்பாடியை அழைத்திருக்க முடியும் என எதிர்கேள்வி கேட்டுள்ளார்.
அப்போதிலிருந்து எடப்பாடியை நான் ஒரு தலைவராகவே ஏற்பதில்லை என அண்ணாமலை கூற அப்படியென்றால் 2021ஆம் ஆண்டு தேர்தலின் போது எடப்பாடியாரின் பின்னால் நின்று கொண்டு ஓட்டுக் கேட்டது ஏன் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர். பாஜகவின் நியமனம் மூலம் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. அந்தப் பதவியும் போய்விடும் என்பதால் தான் பதறுகிறார் என்றெல்லாம் அதிமுகவினர் கூறுகின்றனர். உதயகுமார் மட்டுமின்றி கே.பி.முனுசாமி, கடம்பூர் ராஜு என பலரும் அண்ணாமலையை ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள். பாஜக தரப்பில் கரு.நாகராஜன் போன்றவர்கள் அண்ணாமலைக்கு முட்டுக்கொடுத்துப் பேசுகிறார்கள்.
இந்த இரு கட்சிகளுக்கிடையிலான வார்த்தைப் போரில் கொள்கை சார்ந்து எதுவும் இல்லை. நீயா? நானா? பாணியில் தான் இருவரும் பேசுகின்றனர். ஒரு திரைப்படத்தில் கவுண்டமணியும் செந்திலும் மாறி மாறி நான் முடிச்சவிக்கி, நான் மொல்லமாறி என்று சொல்வதுபோலத்தான் பல விசயங்கள் அமைந்துள்ளன. மோடி அரசு கொண்டுவந்த பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களுக்கு ஆதரவு கொடுத்தது அதிமுக. வேளாண் திருத்தச் சட்டங்களை ஆதரித்ததோடு மட்டுமின்றி நானே பிரச்சாரம் செய்வேன் என்று உணர்ச்சிவசப்பட்டார் அன்றைய முதல்வர் எடப்பாடியார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றால் அந்தச் சட்டமே நிறைவேறியிருக்காது. ஆனால் அதுகுறித்தெல்லாம் அதிமுக கவலைப்படவில்லை. இப்போது தான் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு நிதி தர மறுப்பது குறித்து வாய்திறக்கிறார்கள். நீட் தேர்வு, உதய் மின் திட்டம் போன்றவற்றை மோடி அரசு நிர்ப்பந்தித்ததால் அன்றைய அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. தமிழக அரசு பணியிடங்களுக்கு தமிழே தெரியாதவர்கள் கூட வெளிமாநிலத்தவர் கூட, வரமுடியும் என்பதையும் கூட அன்றைய அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது.
அதிமுகவை சிதைத்து சின்னாபின்னாமாக்கியது பாஜகதான். அன்றைக்கு விசுவாசத்தில் சிறந்தவர்கள் யார் என்று ஓபிஎஸ்-சும், இபிஎஸ்-சும் போட்டி போட்டார்கள். இன்றைக்கு அதிமுகவை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு பாஜக செயல்படுகிறது. உண்மையிலேயே பாஜகவை அதிமுக எதிர்ப்பதாக இருந்தால் அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்க வேண்டும். அதை விடுத்து இருதரப்பு ஏச்சு, பேச்சுகளால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பலனும் இல்லை.