காலையில் எழுவது நலமாகும் -உன்
கட்டுடல் காக்கும் செயலாகும்
கற்றோர் சொல்லை கேட்டிடுவாய்- தினம்
கருத்தாய்ப் பழகச் செயல்படுவாய்!
வாய்மை உனக்கு உயிராகும்- நல்
வார்த்தை அன்பைத் தரலாகும்
வாழ்க்கை என்பது சோலைவனம்-வீணாய்
வழுக்கி வீழ்ந்தால் பாலைவனம்!
உழைப்பே உனக்கு உயர்வாகும் - அது
உயிரை விடவும் மேலாகும்
உன்னுள் இருக்கும் நம்பிக்கை- அதை
உணர்வது தானே மனவேட்கை
முயன்று எழுந்து போரிடுவாய்- பிறர்
மூடத் தனத்தை எதிர்த்திடுவாய்!
முறையாய் வாழ்வில் நடந்திடுவாய்- மனம்
முற்றிலும் மகிழும் உணர்ந்திடுவாய்!
மனதை கட்டுப் படுத்திடுவாய்- சிலர்
மமதை விரட்டப் புறப்படுவாய்!
மனது புண்படப் பேசாதே- தன்
மானம் கெடும்படி நடவாதே!