மதுரை:
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே போலியோ பாதிப்புக்குள்ளாகி பெற்றோரால் கைவிடப்பட்ட பத்து வயதுச் சிறுவனுக்கு, தருமபுரி தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில், மதுரை தொகுதிமக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிஉறுப்பினர் பி. மூர்த்தி ஆகியோர் சேர்ந்து ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கினர்.
கொட்டாம்பட்டி அருகிலுள்ள மங்களாம்பட்டியைச் சேர்ந்த வயதான தம்பதிகருப்பையா, பாண்டியம்மாள் (62). இவர்களது பேரன் விக்னேஷ் (10) பிறந்தபோதே போலியோ பாதிப்புக்குள்ளாகி பெற்றோரால் கைவிடப்பட்டார். பெற்றோர் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. இந்தநிலையில், வயதான தம்பதி கூலி வேலை செய்து பேரனை வளர்க்கின்றனர். இது குறித்து கடந்த வாரம் ஊடகங்களில் செய்திவெளியானது.இதையறிந்த தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் செந்தில், மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பி. மூர்த்தி ஆகியோரைத் தொடர்புகொண்டு, சிறுவனுக்கு உதவ நேரில் வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில், மூவரும் மங்களாம்பட்டிக்கு வந்து ரூ.1லட்சம் நிதியை விக்னேஷிடம் அளித்தனர்.மேலும், பிரதமரின் ஏழைகளுக்கான வீடுகட்டும் திட்டத்தின் கீழ் உதவுவதாக, வெங்கடேசனும், தேவையான கட்டுமானப் பொருட்களை வழங்குவதாக மூர்த்தியும் உறுதியளித்துள்ளனர்.