tamilnadu

உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பு

லக்னோ, டிச.27- உத்தரப் பிரதேசத்தில் நிலவும் சூழ்நிலையை ஆய்வு செய்த பிறகு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்யும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் உத்தரப் பிரதேசத்திற்குச் செல்லும், அப்போது அங்குள்ள நிலை மையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று சுஷில் சந்திரா கூறினார். கொரோனா  வைரசின் ஓமைக்ரான் மாறுபாட்டின் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேசத்தில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு அலகா பாத் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி யது. தேர்தலை ஒத்திவைக்க முடியாத பட்சத்தில், அதிக மக்கள் கூடும் அரசியல் பேரணிகளை நிறுத்துமாறும், அதற்கு பதிலாக தூர்தர்ஷன் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம்  அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யுமாறும் தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், அடுத்த வாரம் உத்தரப்பிரதேசத்திற்கு செல்ல விருப்பதாகத் தெரிவித்தார். உ.பி.க்கு பிறகு பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூருக்கு தேர்தல் ஆணையக் குழு நேரில் செல்லவிருப்பதாகத் தெரிகிறது. அநேகமாக டிசம்பர் 28-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா உத்தரப்பிரதேசம் செல்வார் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.