tamilnadu

கடல் பசுவை போல பாலூட்டி இனம்: வலையில் சிக்கிய கடல் வின்னியை பத்திரமாக கடலில் விட்ட மீனவர்கள்

தஞ்சாவூர், நவ.25– தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த சேவியர், அந்தோணி ராஜ், ஜான்சன், ரோமன் ஆகிய மீனவர்கள்  கடலில் மீன்பிடித்த போது, கடல்பசுவை போன்ற தோற்றம் கொண்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான 40 கிலோ எடையுள்ள கடல் வின்னி என அழைக்கப்படும் பாலூட்டி வலையில் சிக்கியது.  உடனே மீனவர்கள் மெதுவாக வலையில் சிக்கியதை மீண்டும் உயிருடன் கடலில் விட்டனர். இதனை வீடியோ வாக பதிவு செய்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலு வலர் ஏ.எஸ்.சந்திரசேகரனுக்கு அனுப்பினர்.   இதுகுறித்து வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேக ரன் கூறியதாவது:  “கடல் வின்னி என மீனவர்கள் அழைப்பது மீன் அல்ல, பாலூட்டி இனம்.  கடல் பசுவை போல தோற்றம்  உடைய இவை, அதிகபட்சமாக,30–45 கிலோ வரை வளரும், அதிகபட்சமாக 1.5 மீட்டர் நீளம் வரை வளரும். இவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சமநிலையை பராமரிக்க உதவும், கடலின் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ள உதவுகின்றன.  கடல் பசு பாதுகாப்பு மண்டலத்தில் குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மற்றொரு அரிய உயிரினம் உள்ளது. இது தொடர்பாக மீனவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், பாலூட்டி உயிரினமான வின்னியை உயிருடன் கடலில் விட்ட மீனவர்கள் நால்வரையும், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.