tamilnadu

img

மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம் ஆட்சியருக்கு மீன் சங்கம் மனு

தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு, உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதல் மக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் எடுத்துவரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம். 
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அது போல 24 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு கோவிட் 19 சமூகப் பரவலை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக அன்றாடம் வேலை செய்து கூலி பெற்று வாழ்க்கையை நடத்தும் கோடிக்கணக்கான விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் போன்றோர் வேலையின்றி வருமானம் ஈட்ட முடியாமல் வீட்டில் முடங்கி இருப்பதால் அவர்கள் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வழியின்றி அல்லலுறும் நிலைமையுமுள்ளது. 

அதுபோலவே மீன்பிடித்தொழிலாளர்கள் மீன்தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆண், பெண் சிறு வியாபாரிகள், மீன் பதப்படுத்துவோர், மீன் கருவாடு விற்பவர் போன்றோர் வேலையிழந்து செய்வதறியாது அல்லல் பட்டு வீட்டில் முடங்கியுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக இதில் அக்கறை செலுத்தி இத்தொழில்களில் ஈடுபட்டு வரும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணமாக வழங்கிட கேட்டுக்கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.