உடுமலை, பிப்.17- உடுமலையில் 25 ஆண்டுகளாக தீக்கதிர் விநியோகம் செய்யும் அ.ரசித் அலியை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார். உடுமலைப்பேட்டை தாலுகா, பொள்ளாச்சி சாலை யுகேசி நகரில் குடியிருக்கும் அமிர் அம்ஜான் என்பவரது மகன் அ.ரசித் அலி (44). இவர் கடந்த 25 ஆண்டுகளாக உடுமலை நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீக்கதிர் நாளிதழ் மற்றும் செம்மலர் புத்தகங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாயன்று உடுமலைக்கு வருகை தந்தார். அப்போது, கடந்த 25 ஆண்டுகளாக தீக்கதிர் நாளிதழை விநியோகம் செய்து வரும் அ.ரசித் அலியை பாராட்டி அவருக்கு கதராடை அணிவித்து கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ரசித் அலியிடம் கேட்டபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் பிரிண்டிங் பிரஸில் வேலை செய்து வந்தேன். 1996 ஆம் ஆண்டில் கட்சி அலுவலகத்திற்கு வந்து தினமும் சிறிது நேரம் தீக்கதிர் நாளிதழ் படித்துவிட்டு செல்வேன். இதன்பின் மார்க்சிஸ்ட் கட்சியின் பணிகளால் கவரப்பட்டு, கட்சி உறுப்பினராக மாறி கட்சிப் பணிகளில் ஈடுபட துவங்கினேன். அச்சமயம், மறைந்த தோழர் எம்.தங்கவேல் உள்ளிட்ட தோழர்கள் தீக்கதிர் நாளிதழை விற்பனை செய்யவும், அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்கு விநியோகம் செய்யவும் எனக்கு முதலில் பத்து தீக்கதிர் நாளிதழ்களை தந்தனர். அன்று துவங்கி தற்போது தினமும் 100 தீக்கதிர் நாளிதழ்களையும், மாதம் 100 செம்மலர் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாக அ.ரசித் அலி தெரிவித்தார்.