tamilnadu

கூட்டாட்சித் தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சியடையும்

சென்னை,மார்ச் 6- சென்னையில் நடைபெற்ற  தனியார் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் தமிழக நிதி யமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது:  ஒன்றிய அரசு கொண்டுவரும் ஒரே நாடு என்ற கருத்தாக்கத்தை பொருளாதார ரீதியில் ஏற்க முடியாது. கூட்டாட்சி தத்துவத்தை அனுசரித்து செயல்பட்டால்தான் நாடு வளர்ச்சி காணும். அதேவேளையில், பிற மாநிலங்களை விட தமிழகம் பெரும்பாலான துறைகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால், மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகிறது. தமிழ்நாட்டின் தனிநபர் வருவாய் குஜராத்தை  விட 10 இல் இருந்து 15 ஆயிரம் குறைவுதான். நிதி மேலாண்மையில் குஜராத் சிறப்பாக செயல்படுகிறது. மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் 15 வயதுக்கு கீழ் உள்ள  குழந்தைகளில் 100 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளிக்கு போகாத 15 வயதிற்கு உட்பட்ட பெண்களே தமிழ்நாட்டில் இல்லை. அதே வேளையில், குஜராத்தில் 15 முதல் 20 சதவீதம்  பெண்கள் பள்ளிக்கூடம் போவதில்லை. இது எந்த மாதிரி வளர்ச்சி? அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் ஆயிரம் பேருக்கு நான்கு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அதே குஜராத்தில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கிறார். இதில் எந்த சமூக நிலையை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்?ஜிடிபி மட்டுமே வளர்ச்சியை நிர்ணயிக்காது. நாங்கள் எங்களுக்கென தனி வழி வைத்திருக்கிறோம், அது எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்கும். அதற்கு பெயர் திராவிட மாடல். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் பேச்சு நாடு முழுவதம் வரவேற்பைப் பெற்றுள்ளது.