tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பிப்.25 அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி  

சென்னை: புரட்சியாளர் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 25 அன்று கோவை வருகை தரும் நிலையில், அவருக்கு எதிராக தமது தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலைக்கு சவால்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒருமையில் விமர்சித்தது தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அதில், “பாஜக தலைவர் அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர முடியவில்லை. பிரச்சனையை மடைமாற்றும் செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்” என்றார். “போஸ்டர் ஒட்டுவதாக கூறிய அண்ணாமலை தாராளமாக வரட்டுமே. அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள்” என்றும் கூறினார்.

பட்டாசு விபத்துக்கு நிவாரணம்

சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் நகைகள் ஏலம்

சென்னை: 1991 முதல் 1996 வரை தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது வரு மானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. 6 இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் சென்னை கொண்டு வரப்பட்டு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நகைகளை ஏலம் விடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெயில் 4 டிகிரி வரை அதிகரிக்கும்

சென்னை:  தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பிப்ரவரி 22 முதல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். பிப். 23, 24 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.