tamilnadu

img

கொப்பளித்த குருதி... - சேதுசிவன்

வீட்டிலோ தெருவிலோ ஒவ்வொரு முறை 
குழந்தைகளை கொஞ்சும் போதும் - பதட்டம் 
தொலைவில் மரணஓலம் கேட்கிறது 

அப்பாவின் தோசையும் அம்மாவின் குழம்பும் 
மூக்கை துளைக்கும் போது - விம்முகிறேன் 
பசித்த வயிறுகளின் சத்தம் கேட்கிறது 

பலரும் படித்து பட்டம் வாங்கியபோது 
பாலஸ்தீனர்களுக்கு கல்வி நிலையங்களே - சவக்குழியானது 
பாருங்கள் சன்னல் கொண்ட கல்லறைகளை 

எவ்வளவு நாட்கள் தான் எழுதுவது ?
மரணத்தின் வலிகளை 
எங்கள் விரல்கள் கண்ணீர் வடிக்கின்றன 
நாங்கள் எழுதும் ஒவ்வொரு - வரியிலும் 
ரத்த ஆறு ஓடுகிறது 

உயிரோடு எரிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் - சிதை 
வாடையை சுமந்து வந்தது தென்றல் 
செவ்வானத்தை பார்த்து மரத்தடியில் அமர்ந்திருந்தேன் 

அப்போது எனது தின்பண்டங்களை 
பங்கு போட்டுக் கொண்ட 
காகம் சொன்னது
பாலஸ்தீன குழந்தைகளின் தலைகள் 
பறிக்கப்பட்ட பின் கொப்பளித்த
குருதி - அதுவென்று!