வீட்டிலோ தெருவிலோ ஒவ்வொரு முறை
குழந்தைகளை கொஞ்சும் போதும் - பதட்டம்
தொலைவில் மரணஓலம் கேட்கிறது
அப்பாவின் தோசையும் அம்மாவின் குழம்பும்
மூக்கை துளைக்கும் போது - விம்முகிறேன்
பசித்த வயிறுகளின் சத்தம் கேட்கிறது
பலரும் படித்து பட்டம் வாங்கியபோது
பாலஸ்தீனர்களுக்கு கல்வி நிலையங்களே - சவக்குழியானது
பாருங்கள் சன்னல் கொண்ட கல்லறைகளை
எவ்வளவு நாட்கள் தான் எழுதுவது ?
மரணத்தின் வலிகளை
எங்கள் விரல்கள் கண்ணீர் வடிக்கின்றன
நாங்கள் எழுதும் ஒவ்வொரு - வரியிலும்
ரத்த ஆறு ஓடுகிறது
உயிரோடு எரிக்கப்பட்ட பாலஸ்தீனர்களின் - சிதை
வாடையை சுமந்து வந்தது தென்றல்
செவ்வானத்தை பார்த்து மரத்தடியில் அமர்ந்திருந்தேன்
அப்போது எனது தின்பண்டங்களை
பங்கு போட்டுக் கொண்ட
காகம் சொன்னது
பாலஸ்தீன குழந்தைகளின் தலைகள்
பறிக்கப்பட்ட பின் கொப்பளித்த
குருதி - அதுவென்று!