பிறப்பினும்
இறப்பினும்
இவன்
இருப்பினை போற்றும்
மானுடம்.
உபரி மதிப்பை
உற்பத்தி செய்தான்.
உழைப்பவர் யாவரும்
ஓரினம் என்றான்.
வறுமையை ஒழித்திட
வழிதனை சொன்னான்
வக்கனையாய்
தின்று கொழுக்கும்
முதலை வர்க்கம்.
எங்கள் உழைப்பை
சுரண்டுது என்றான்.
பொருளே முதல் என்றான்
அன்னப்பறவை போல
பொருளதில் உழைப்பை
பிரித்தால்
ஒன்றுமே இருக்காதென்றான்.
சமூகம் மாறுமென்றான்
மாற்றத்தை தவிர்த்து
எல்லாமே மாறுமென்றான்.
நாடுநாடாய் சுற்றினான்
சுற்றுலா அல்ல.
வாசித்தே சுவாசித்தான்.
மானுடத்தை
வறுமையிலும் நேசித்தான்.
வர்க்கங்கள் இரண்டென்றான்.
இரண்டுக்கும் முரணென்றான்.
உலகத்தொழிலாளிகளை
ஒன்றுசேர கட்டளையிட்டான்.
ஏங்கெல்ஸின் நட்புக்கும்
ஜென்னியின் காதலுக்கும்
இலக்கணமானான்.
சொன்னதெல்லாம்
சொல்லி வைத்ததெல்லாம்
நடக்கிறது.
இவன்
ஜோசியக்காரனல்ல.
உலகையே
புரட்டிப் போட்டான்.
இவன் கடவுளுமல்ல.
கடவுள் பெயரைச் சொல்லி
செரித்தவரெல்லாம்
வெறுத்து ஒதுக்கினர்.
இவன்
பூதமுமல்ல.
அறிவியற் கண்கொண்டு
சமூகத்தை ஆய்ந்து
பொதுவுடமை
தத்துவம் தந்தான்.
அவன் தான் மார்க்ஸ்.
காரல்மார்க்ஸ்.
205 மட்டுமல்ல,
இவன் பிறந்து
கோடியாண்டானாலும்,
சாவில்லா சாத்தானவன்
முதலாளித்துவ வர்க்கத்திற்கு
வாழ்க மார்க்ஸ்
வாழிய மார்க்சியம்….
- கவிஞர். இராஜசரத்
செம்பூவே...!
புரட்சி என்னும் பூ மலரை
புவிதனிலே மலரச் செய்ய
பூத்த எங்கள் பூவே....செம்பூவே -
புதுயுகம் காணும் மூலதன சரித்திரமே
-புரட்சி
மானுட விடுதலையின் மகத்துவமே - நீ மார்க்சிய தத்துவத்தின் அடித்தளமே மன்னராட்சி கொடுமைகளை வீழ்த்தினாய் - என்றும்
மாறாதது ஏதுமில்லை உணர்த்தினாய்
- புரட்சி
நீர் நிலம் காற்று எல்லாம் பொதுவானது -இத தனதாக்கி கொள்ளும் மனம்
சுயநலமானது
எளிய மக்களின் உழைப்பு இங்கு மலிவானது -இது ஏகபோக அதிகார திமிரானது
- புரட்சி
வறுமையிலும் வாடிடாமல்
எதிரி கண்டு அஞ்சிடாமல்
எட்டுத் திக்கும் நடுங்க வைத்த சோசலிசமே-எங்கள் ஜென்னி மார்க்சை கரம்பிடித்த பொக்கிசமே
- புரட்சி
விஞ்ஞானம் இயற்கையோடு ஒத்தானது மதம் என்றும் போதைக்கு ஒப்பானது
விதி என்றும் மதி என்றும் ஏய்க்கலாகலாம் - என
விதைத்துச் சென்ற நின் தியாகம் பொய்க்கலாகுமோ
-புரட்சி
வாழ்வினிலே வளம் பெறவே
உழைக்கும் மக்கள் நலம் பெறவே
வர்க்கப் போரே விடுதலைக்கான பாதை
என்ற தத்துவத்தைத் தந்த எங்கள் மேதை-மாமேதை
வாழ்க வாழ்க வாழ்கவே கார்ல் மார்க்ஸ் வாழ்கவே...
- ப.செல்வன்
சிபிஎம் திருவண்ணாமலை
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்