tamilnadu

img

எச்எம்பிவி தொற்று 5 நாட்களில் குணமாகிவிடும்; அச்சம் வேண்டாம்

சென்னை, ஜன.7- ‘எச்எம்பிவி தொற்று குறித்து அச்சம் வேண்டாம். தொற்று பாதித்தால் 4 அல்லது 5 நாட்களில் குணமாகிவிடும்’ என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழகத்தில் எச்.எம்.பி.வி தொற்று உறுதி செய்யப் பட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: எச்எம்பிவி தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். இந்த தொற்று அறிந்தவுடன் உலக சுகாதார நிறுவனத்திடம் முழு தகவல்கள் பெறப்பட்டன. உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது. இந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியை தமிழக அரசு துவங்கி உள்ளது. 2001 ஆம் ஆண்டில் எச்எம்பிவி தொற்று முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். முகக் கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும். இனி வரும் காலங்களில் வைரஸ்களுடன் தான் வாழ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே 3,4 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். முகக் கவசம் அணிந்து செல்க தமிழகத்தில் எச்எம்பிவி தொற்று பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். அச்சம் தேவையில்லை. ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். எச்.எம்.பி.வி., வைரஸ் வீரியம் மிக்கது அல்ல. வீரியம் குறைந்தது தான். சோப்புப் போட்டு கை கழுவுதல் உள்ளிட்டவற்றை கட்டாயம் செய்ய வேண்டும். தொற்று குறித்து அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார். மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தேவையில்லை. சளி, இருமல் இருப்பவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.