அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கிலிருந்து திமுக, சிபிஎம் தலைவர்கள் விடுவிப்பு
தஞ்சாவூர் நீதிமன்றம் தீர்ப்பு
கும்பகோணம், ஜுன் 7- கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 2018 மே 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகே, ஸ்டெர்லைட் கம்பெனி தொடர்பாக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும் திமுக அப்போதைய செயல் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சென்னையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி பொய் வழக்கு போடப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் மற்றும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமையில் ஒன்று சேர்ந்து திமுக மாநகரச் செயலாளர் சுப தமிழழகன், சிபிஎம் மாநகரச் செயலாளர் கே. செந்தில்குமார், மாநகரக் குழு உறுப்பினர் எஸ்.டி. நாகராஜ் மற்றும் திமுகவினர் மீது போடப்பட்ட பொய் வழக்கு தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் விசாரணை கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஜுன் 6) தஞ்சாவூர் நீதிமன்றம் எண் 1 நீதி துறை நடுவரால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பொய் வழக்கு போடப்பட்ட அதிமுகவின் வழக்கை தள்ளுபடி செய்து, திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், கும்பகோணம் மாநகர துணை மேயர் சுப தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், மாநகரக் குழு உறுப்பினர் நாகராஜ் உட்பட திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட பொய் வழக்கில், கழகத்தின் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஜெயச்சந்திரன், எம். மணவழகன், மாநகர வழக்கறிஞரணி தலைவர் ஆர். அன்பழகன் மற்றும் கழக வழக்கறிஞர் ஜே. ராஜலட்சுமி ஆகியோர் அதிமுக ஆட்சி காலத்தில் தொடுக்கப்பட்ட பொய் வழக்கில் ஆஜராகி வாதாடினர்.