tamilnadu

அறுவைச் சிகிச்சையில் காதுகேட்கும் திறனை இழந்தவர் இழப்பீடு கேட்டு வழக்கு

மதுரை, அக்.3- தவறான சிகிச்சையால் செவிகளின் திறன் இழந்ததாகவும், சிகிச்சை குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென தொடரப்பட்ட வழக்கில் மருத்துவத்துறை இயக்குநர், அரசு ராஜாஜி மருத்துவமனை  முதல்வர்  பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த புஷ்பவள்ளி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அதில்,  நான் கடந்த 27. 6. 2017 அன்று இரு காதுகளிலும் கடுமையான வலி ஏற்பட்டதால்,  அரசு ராஜாஜி, மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர்கள் எவ்விதப் பிரச்னையும் இல்லை எனக் கூறி  மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்தனர். ஆனால் 11 .07.2017-அன்றும் மீண்டும் கடுமையாக வலி ஏற்பட்டதால், மீண்டும் ராஜாஜி மருத்துவ மனைக்குச் சென்றேன். எனது வலது பக்க காதில் அறுவைச் சிகிச்சை செய்தனர். இதைத் தொடர்ந்து எனது வலது பக்க காது கேட்கும் திறனை முற்றிலுமாக இழந்தது. ஒரு ஆண்டு கழிந்த நிலையில்,  எனது இடது பக்க காதிலும், கடுமையாக வலி ஏற்பட்டது. இதனையடுத்து  11.08.2018 அன்று எனக்கு  இடது பக்க காதில், அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. அதில் எனது செவித்திறன் முற்றிலுமாக பாதிக்க பட்டது, இரு காதுகளின் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சையளிக்க கேட்டுக் கொண்டும் என்னை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டனர். எனக்கு மேல் சிகிச்சை அளிக்காததால், தற்போது நான் கேட்கும் திறன் இல்லாமலும், வலியோடும்  வாழ்ந்து வருகிறேன். எனவே எனக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது மருத்துவ குறைபாட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.  இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்னிலையில், வியாழனன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி மருத்துவத்துறை இயக்குநர், அரசு ராஜாஜி மருத்துவமனை  முதல்வர்  ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.