tamilnadu

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆவது பகுதிக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ரூ.19.99 கோடி விடுவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 ஆவது பகுதிக்கு  பயிர் காப்பீடு இழப்பீடு தொகை ரூ.19.99 கோடி விடுவிப்பு

வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

தஞ்சாவூர், ஜுன் 22-  பயிர் காப்பீடு இழப்பீடு தொகையாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது பகுதிக்கு முதற்கட்டமாக ரூ.19.99 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: வேளாண்மைத் துறையில், எதிர்பாராமல் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட அரசின் பங்களிப்போடு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் அம்மாபேட்டை (அய்யம்பேட்டை, மற்றும் பாபநாசம் பிர்க்கா தவிர) வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர்  ஒன்று பகுதிகளுக்கு, காப்பீட்டு நிறுவனமான ஷீமா பொது காப்பீடு நிறுவனம் மூலம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு சம்பா - தாளடி  பருவத்திற்கு 49,345 விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு பருவ (சம்பா -தாளடி) பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.44.91 கோடி அறிவிக்கப்பட்டு, இதுவரை ரூ.42.91 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. பெறப்பட வேண்டிய மீதத் தொகை வழங்குதல் செயல்பாட்டு நடவடிக்கையில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் இரண்டு பகுதிகளுக்கு காப்பீட்டு நிறுவனமான அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ரபி சிறப்பு பருவத்துக்கு 44,741 விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரபி சிறப்பு பருவ (சம்பா - தாளடி) பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.51.12 கோடி அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக ரூ.19.99 கோடி விவசாயிகளின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு பயிர் காப்பீட்டு இணையதள வழியாக வங்கிகள் மூலம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தொகை அடுத்தடுத்த கட்டங்களில் வரவு வைக்கப்படும்.  2024-2025 ஆம் ஆண்டு ரபி சிறப்பு பருவ இழப்பீட்டுத் தொகை வழங்குதல் தொடர்பான விவசாயிகளின் விவரம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இடம் பெற்றுள்ளது. எனவே, விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி இது தொடர்பாக விவரங்களை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.