tamilnadu

img

சமத்துவ மயானங்களை உருவாக்குக!

சென்னை, ஜன. 28- சாதிய மயானங்களை அகற்றி விட்டு சமத்துவ மயானங்களை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் வலியுறுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் வீரளூர் அருந்ததிய மக்கள் மீது ஆதிக்க சாதியினர் நடத்திய கொலை வெறித் தாக்குதலைக் கண்டித்து ஆதித்தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளியன்று (ஜன. 28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு முன்னிணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், “சாதியாக சமூகம் பிளவுபட்டு கிடக்கும் போது, ஒரு அரசியல் இயக்கம் சாதி கடந்த சிந்தனையை தன்னுடைய உறுப்பினர்களியே உருவாக்கக் கூடிய பணிகளை கம்யூனிஸ்ட் இயக்கம் செய்து வருகிறது” என்றார்.

அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சாதி கடந்த சிந்தனைகளை தன்னுடைய தொண்டர்களிடையே உருவாக்கும் போதுதான், நாடு ஜனநாயகத்தை, பண்பாட்டை, கலாச்சாரத்தை நோக்கி பயணிக்கும் போதுதான் இதுபோன்ற வன்கொடுமைகளை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார். அனைத்து இடங்களிலும் உள்ள சாதிய மயானங்களை அகற்றிவிட்டு சமத்துவ மயானங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி அருந்ததிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி சேதங்களை முறையாக கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஆதித் தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் கு.ஜக்கையன் பேசுகையில், “ஒரு அரசியல் கட்சியின் தூண்டுதலால் ஆதிக்க சாதியினர் அருந்ததிய மக்களை தாக்கியது மட்டுமல்லாமல், குடிநீர் தொட்டிகளில் சிறுநீர் கழித்துள்ளனர். விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லியை கலந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக அந்த கிராம மக்களையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுள்ளார்கள்” என்று குற்றம் சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன் பேசுகையில், “சாதி இல்லை என்பதை ஆரம்பக் கல்வியில் இருந்தே கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் சாதியக் கட்டுமானங்களை தகர்த்தெறிய முடியும்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஆதித்தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் சுப.இளங்கோவன், சென்னை மாவட்டச் செயலாளர் ஆ.ரமேஷ், ராஜசேகரன், வீரளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முத்துராமன், ஏழுமலை, சக்திதேவன், ஜி.இஸ்ரேல் உள்ளிட்டோரும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட வீரளூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.