tamilnadu

img

ஆடு அடிக்கும் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

ஆடு அடிக்கும் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்\

திருவாரூர், மார்ச் 20-  பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் இறைச்சி கிடைக்க, ஆட்டு இறைச்சி மார்க்கெட்டில் ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் ஆட்டு சந்தை நகராட்சி சார்பாக புதிய கட்டிடம் மற்றும் சந்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டத்தில் சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர்கள் வைத்தனர். திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் மூன்றாம் ஆண்டு நிறைவுபெற்று நான்காம் ஆண்டு துவக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் கவிதா பாண்டியன் தலைமை வகித்தார். ஆணையர் துர்கா, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நியமனக்குழு உறுப்பினர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். சிபிஎம் துணைத்தலைவர் எம்.ஜெயபிரகாஷ் பேசும் போது, நகராட்சியில் உள்ள ஆட்டு இறைச்சி மார்க்கெட்டில், பொதுமக்கள் சுகாதாரமான முறையில் அச்சமின்றி இறைச்சியை வாங்குவதற்கு ஆடு அடிக்கும் தொட்டி அமைக்க வேண்டும்(ஆட்டின் காதில் கடுக்கன் போட்டு ஆடு அறுக்கும் முறை). அதேபோல் நகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் ஆட்டுச் சந்தை நகராட்சி சார்பாக அமைத்திட வேண்டும். மேலும் 24 ஆவது வார்ட்டில் உள்ள சிங்களாந்தி சுடுகாட்டு சாலையில் உள்ள மின் கம்பங்கள், கஜா புயலில் சேதமடைந்து சீர் செய்யப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சுடுகாட்டுக்கு இறந்தவர்களை கொண்டு செல்லும்போது பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. ஆகவே, மின்சார வாரியத்தின் வாயிலாக உடனடியாக புதிய மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து 11 ஆவது வார்டு  உறுப்பினர் ராமலோகேஸ்வரி ரகுராமன் பேசும்போது, 11 ஆவது வார்டு பகுதியில் கூடுதலாக புதிய மின் கம்பங்கள் அமைக்க வேண்டும், ரூ.7 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலையம் கட்டுமான பணியை காலத்தோடு முடிக்க வேண்டும் என்றார். கோரிக்கைகள் நிதி வந்ததும் நிறைவேற்றப்படும் குடிநீரை பொறுத்தவரை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படும் தண்ணீர் அளவைப் பொறுத்து 24 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. புதிய பேருந்து நிலைய கட்டுமானம் நிறைவு பணியில் உள்ளது. 2 மாதத்தில் திறக்கப்படும் என நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன் பதில் அளித்து பேசினார். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.