மதுரை, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மதுரை மாநகர் மாவட்ட 24 ஆவது மாநாடு ஞாயிறன்று துவங்கியது. முன்னதாக, சனிக்கிழமை மூத்த தோழர் ஏ.பி.பெரியசாமி 23 ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்ற மேற்கு- 1 ஆம் பகுதி குழுவில் இருந்து கொடியை எடுத்துக் கொடுக்க, செங்கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் கு.கணேசன் பெற்றுக் கொண்டார். மத்திய-1 ஆம் பகுதிக்குழு செயலாளர் ஏ.பாண்டி தலைமையிலான கொடிப் பயணம், வைத்தியநாதபுரம் மகா மகாலில் தோழர்கள் எஸ்.ஞானம், என்.பி. ராமச்சந்திரன் நுழைவு வாயில், தோழர் என்.சங்கரய்யா நினைவரங்கில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கிற்கு செந்தொண்டர் அணிவகுப்புடன் வந்தது. செங்கொடியை மாவட்டக் குழு உறுப்பினர் என்.ஜெயச்சந்திரன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து மூத்த தோழர் வி.கே.பழனி கொடியை ஏற்றி வைத்தார். தீக்கதிர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தியாகிகள் நினைவு ஜோதி பயணத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தெய்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.ராதா தியாகிகள் நினைவு ஜோதியினை எடுத்துக் கொடுக்க, மூத்த தோழர் கே.ஆடியராஜன் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, ஜா.நரசிம்மன், வை.ஜென்னியம்மாள், அ.பாவல் சிந்தன், மோகன் ஆகியோர் தலைமையில் மாநாடு நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சசிகலா அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். மாவட்டக் குழு உறுப்பினர் வி.கோட்டைச்சாமி வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் அரசியல் ஸ்தாபன மற்றும் வேலையறிக்கையையும், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.கோவிந்தராஜன் வரவு - செலவு அறிக்கையையும் சமர்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் எம்.பி., எஸ்.கண்ணன், மாநில குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.