பெங்களூரு, ஏப். 16 - கர்நாடக சட்டசபை தேர்தலில் பாகேபள்ளி தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மூன்று முறை வெற்றி பெற்ற இந்த தொகுதியில் 2018 தேர்தலில் இரண்டாவது இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடா அறிவித்துள்ளார். 2024 மக்களவைத்தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நிற்பேன் என்று தேவகவுடா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இந்நிலையில், பாகேபள்ளி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒப்புக் கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக டாக்டர். அனில்குமார் களமிறங்குகிறார். சனிக்கிழமை டாக்டர். அனில்குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பேரணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தொடங்கி வைத்தார். 2018 தேர்தலில் காங்கிரஸின் எஸ்.என்.சுப்பாரெட்டி 14,013 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.வி.ஸ்ரீராம ரெட்டியை தோற்கடித்தார். மூன்றாவது இடத்தில் இருந்த ஜேடிஎஸ் அந்தத் தேர்தலில் 38,302 வாக்குகள் பெற்றது. இங்கு பாஜக 5000 வாக்குகளைப் பெற்றது. 1983, 1994 மற்றும் 2004 தேர்தல்களில் பாகேபள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 1983 -ல் ஏ.வி.அப்பாசாமி ரெட்டியும், 1994 மற்றும் 2004-ல் ஜி.வி.ஸ்ரீராம ரெட்டியும் வெற்றி பெற்றனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் - 65710, சிபிஎம் 51697, ஜேடிஎஸ் - 38302, பாஜக - 4140 வாக்குகள் பெற்றன. பாகேபள்ளியில் இம்முறை செங்கொடி நிச்சயம் வெற்றி பெறும் என இத்தொகுதி தொழிலாளர் வர்க்கம் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறது.